Thursday, September 28, 2006

கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு விவகாரம்- கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விளக்கிக் கூறுவதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியை சந்திப்பதற்கு இடையறாது முயற்சி மேற்கொண்டிருந்த போதிலும், அவ்வாறு அவர்கள் தன்னைச் சந்திப்பதற்கு முயற்சித்ததாகக் கூறுவது வெறும் கட்டுக்கதையென்று அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லையென்ற கலைஞரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக கட்சிகளின் வட்டாரங்களும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்வதில் முன்னின்று பாடுபட்ட முக்கியஸ்தர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். முதலமைச்சர் கருணாநிதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர்களிடமிருந்து இக்கடிதங்களுக்கான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தன் தமிழகம் வந்து சேருவதற்கு முன்னதாக பல கட்சிகளின் தலைவர்களை மாவை சேனாதிராஜாவும் சச்சிதானந்தனும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நியமனம் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறே அக் கடிதத்தில் வேண்டுதல் விடுக்கப்பட்டது. செப்டெம்பர் 7 ஆம் திகதியும் சம்பந்தன் தனியாகக் கையெழுத்திட்டு பிற்பகல் 2 மணியளவில் கலைஞரின் வீட்டுக்கு தொலை நகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் கடிதத்தை அனுப்பினார்.

செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமர் கலாநிதி சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பிய பின்னரும் கூட கலைஞர் கருணாநிதியைச் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்க வில்லை என்ற கலைஞர் கருணாநிதியின் கூற்று குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நேற்று புதன்கிழமை மாலை சென்னைக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைஞர் கூறியது சகலதுமே உண்மைக்குப் புறம்பானது என்று சொன்னார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவினர் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு 10 நாட்களாக இடையறாது முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை. சந்திப்பதற்கு அவர் மறுத்து விட்டார். இத் தூதுக்குழுவினரை இந்தியப்பிரதமர் சந்திக்க மறுத்தமைக்கும் கருணாநிதி அவர்களைச் சந்திக்க முதலில் மறுத்ததே காரணமாக இருக்கக் கூடும். தமிழக முதலமைச்சரே சந்திக்க மறுத்த தூதுக்குழுவினரை தான் ஏன் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்திருக்கக்கூடும். இதற்கெல்லாம் முழுப் பொறுப்பு முதலமைச்சர் கருணாநிதியே என்று நெடுமாறன் கூறினார்.

நன்றி: தினக்குரல்

2 பின்னூட்டங்கள்:

said...

சந்திக்க மறுப்பதே ஒரு பச்சை சந்தர்ப்பவாதம். ஒருநாள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவது, பின் காரியம் கனிந்த பின் அவர்களை தூக்கி எறிவது.... இதுதான் கருணாநிதி.

மேலும், சந்திக்க மறுக்கிறேன் என்று தைரியமாக சொல்ல மனம் வராமல் அதை பிறர்மேல் பழி போட்டு பொய் சொல்வது பச்சை பேடித்தனம். (அதென்ன, உண்மைக்கு புறம்பான.... பொய்யான என்றே எழுதுங்களேன். ஏன் இந்த பசப்பல்???)

எங்கள் முதல்வரை நினைத்து நான் வருந்துகிறேன்...

நன்றி

said...

பொய்யென்பது அரசியல் வாதிகளுக்குப் புதிதல்ல. ஆனாலும், எங்கெங்கே பொய் சொல்ல வேண்டும் என்பது தெரிந்திருத்தல் நல்லது. காரணங்களை வெளிப்படையாகச் சொல்லலாம். சந்திப்பதற்கு இவ்வளவு முயற்சி எடுத்தும் சந்திக்க முடியாமல் போனதற்காகக் குறை சொல்லாமல் பேசும் சம்பந்தன் போன்றோரின் அரசியல் முதிர்ச்சி போற்றத்தக்கது.

நாங்கள் இதைப் பெரிதாக்காமல் விடுவது தான் நல்லது.