Tuesday, November 28, 2006

தமிழீழத் தனியரசுதான் தீர்வு- தேசியத் தலைவர்

தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சி நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையன்று தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம்:

"நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானத்திற்கான இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் நாம் எம்மால் இயன்றதைச் செய்தோம். பொறுமையினைக் கடைப்பிடித்தோம். அமைதிவழித் தீர்வினைக் கொண்டுவருவதற்காக எண்ணிலடங்கா சந்தர்ப்பங்களை வழங்கினோம். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது ஒரு தடவையும், மகிந்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை ஒத்திவைத்து, சமாதான முயற்சிகளுக்கு மேலும் சந்தர்ப்பங்களை வழங்கினோம்.

தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டிநிற்கின்றோம்.

தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம்.

இடம்பெயர்ந்து உலகம் பூராகவும் பரந்து வாழும் புலம்பெயர்வாழும் தமிழ் உறவுகள் எமது போராட்டத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களுக்கு எங்களது அன்பையும் நன்றிகளையும் நாம் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும், ஆதரவினையும் தொடந்தும் வழங்கும்படி கேட்டுநிற்கின்றோம்.

தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சி நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையன்று தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய முழுமையான உரையை இங்கு வாசிக்கலாம்:

http://www.eelampage.com/?cn=29959

Saturday, November 18, 2006

ஓராண்டு கால ஆட்சியில் மகிந்த சாதித்தது என்ன?

சிங்கள இனத்தின் கடும்போக்காளர் என பலராலும் கருத்துக்கூறப்பட்ட மகிந்தவின் புதிய அரசு பதவியேற்று ஒரு வருடம் இந்த மாதம் 18 ஆம் நாளுடன் பூர்த்தியடைகின்றது. இந்த கடும்போக்கு அரச கூட்டணியால் தமிழ் மக்களின் விடுதலைப் போரை மழுங்கடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முதலில் போர்நிறுத்த ஒப்பந்தமீறலாகி, மென்தீவிரயுத்தமாகி, தீவிர போராகி இன்று சத்தமின்றி நாலாம் கட்ட ஈழப்போர் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

போர்நிறுத்தத்தில் உள்ள பலவீனமான சரத்துக்களையும், கருணா குழு என்ற ஒட்டுக்குழுவையும் நம்பி மகிந்தர் ஆரம்பித்த போர் இந்த ஒரு வருடத்தில் அவரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியுள்ளதா?

மகிந்த சுதந்திரக்கட்சியில் இருந்து ஜனாதிபதியாக தெரிவாகி இருந்தாலும், ஜனாதிபதியான பின்னர் பண்டாரநாயக்கா குடும்பம் அரசியலில் கொண்ட செல்வாக்கை போல ஏன் ராஜபக்ச குடும்பம் ஒரு உயர்மட்ட செல்வாக்கை பெறமுடியாது என சிந்திக்க தலைப்பட்டுள்ளார். எனவேதான் தனது முதல் வேலையாக பண்டாரநாயக்க குடும்பத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்ட ஆரம்பித்திருந்தார். ஓரங்கட்டுவது மட்டுமல்லாது முற்றாக அழித்துவிடவும் மகிந்த துணிந்துவிட்டார் என்றே கூறமுடியும்.

அதனால் தான் முன்னைநாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது உயிரை கையில் பிடித்தபடி லண்டனுக்கும் அமெரிக்காவிற்கும் பறந்து கொண்டிருந்தார். அவர் ஒரு சாதாரண பிரஜையாக கூட இலங்கை திரும்ப முடியவில்லை. இறுதியில் யுனெஸ்கோவில் ஒரு பதவியை பெற்றுக்கொண்டு உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க தனது நாட்டிற்கு தற்போது திரும்பியுள்ளார். இனிமேல் மகிந்த நினைத்தாலும் சந்திரிகாவை கொல்ல முடியாது ஏனெனில் ஒரு யுனெஸ்க்கோ பிரதிநிதியை கொன்றுவிட்டார் என்ற பழி அரசு மீது வீழ்ந்துவிடும்.

மகிந்தவின் அடுத்த இரு நகர்வுகளும் மகிந்தரின் இனவாதக் கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியவை. தனது குடும்ப உறுப்பினர்களையும் அவர்களின் விசுவாசிகளையும் பொறுப்பான பதவிகளில் அமர்த்தியதுடன். எதிர்த்தரப்பு முக்கியஸ்தர்களும் ஓரங்கட்டப்பட்டார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் நியமனங்களும், மேஜர் ஜெனரல் வஜீர விஜயகுணவர்த்தன தூக்கி எறியப்பட்டதும்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்து அதன் உறுப்பினர்களை உள்வாங்குவது இரண்டாவது உத்தி. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்சி தாவியவர் தான் கேகலிய ரம்புக்வெல. தற்போது அவர் செஞ்சோற்றுக் கடன்கழிக்கும் தொழிலை தான் செம்மையாக செய்து கொண்டு இருக்கிறார்.

அரசியலில் தனது கட்சி மற்றும் குடும்ப அரசியலை உறுதிப்படுத்தும் வேலைகளை முடுக்கிவிட்ட மகிந்த தென்னிலங்கையில் தனது செல்வாக்கை வலுப்படுத்த அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார். அது என்ன என்பதை நீங்களே ஊகித்திருப்பீர்கள். தமிழ் மக்களின் மீதான ஆக்கிரமிப்பு போர்களையே சிங்கள அரசுகள் தென்னிலங்கையில் தமது செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு எப்போதும் கையில் எடுப்பதுண்டு.

'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என ஜே.ஆரும், 'சமாதானத்திற்கான போர்" என சந்திரிகாவும் ஏறிய குதிரைக்கு பெயர் மாற்றப்பட்டது. அதுதான் 'பேச்சும் போரும்" இந்த பேச்சும் போரும் என்ற தந்திரம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தேசப்பற்றாளர்களையும், அப்பாவி பொதுமக்களையும் கருணா குழு என்ற போர்வையில் சிங்களப்படை படுகொலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து தீவிரமானது. இதை எதிர்த்து மக்கள் படையின் தற்காப்பு தாக்குதல்களும் ஆரம்பமாகின. வேறு வடிவில் சொல்வதானால் நாலாம் கட்ட ஈழப்போரின் கொரில்லாத் தாக்குதல்கள் உக்கிரமாகின.

விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என சிங்களப் படைகளின் போர் எல்லைகள் விரிந்தன. இந்த போர்முனைப்புக்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு ஏற்பட்டது. தாக்குதல்கள், பதில் தாக்குதல்கள், ஊடுருவித் தாக்குதல்கள் என களம் கட்டுமீறியது. கருணா குழு என அரசு போட்டிருந்த முகமூடி தூக்கி வீசப்பட்டது. நேரடியான மோதல்களில் சிங்கள அரசு இறங்கியது அதற்கு காரணமும் அரசால் கூறப்பட்டது.

எனினும் அவசரமான ஒரு இராணுவ வெற்றி மகிந்தருக்கு தேவைப்பட்டது ஏனெனில் ஜே.வி.பி, கெல உறுமைய போன்றவற்றின் வாயை அடக்குவதற்கும், முடிந்தால் பொதுத்தேர்தலையும் நடாத்திவிடுவதற்கும். இந்த இராணுவ வெற்றிக்கு முதற்படியாக போர்நிறுத்த காலத்தில் புலிகளின் பலத்தை குறைத்துவிட திட்டமிட்டது அரசு. இதற்காக மூன்று அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டன.

  • சர்வதேசத்தடைகள், உள்ளுர் பொருளாதார தடைகள், தமிழ் வர்த்தகர்கள் மீதான படுகொலைகள் மூலம் புலிகளின் நிதிவளத்தை முடக்குதல்.
  • வலிந்த தாக்குதல்கள் மூலம் புலிகளின் படைபலத்தை குறைத்தல்.
  • விமானக் குண்டுவீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், படுகொலைகள் மூலம் தமிழ் மக்களின் போரிடும் மனவலிமையை சிதறடித்தல்.

'எந்தத்தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்கும் (For every action, there is an equal and opposite reaction) என்ற நியூட்டனின் மூன்றாம் விதி சிங்கள அரசிற்கு புரியாது போனது தான் ஆச்சரியம். சிங்கள அரசின் தாக்குதல்களுக்கான பதிலடிகள் தெரிந்தெடுத்த இலக்குகள், தெரிந்தெடுத்த படையணிகள், அழிக்கப்பட வேண்டிய கனரக போர்க்கலங்களின் மீது துல்லியமாக வீழ்ந்தது.

பெரும் படையணிகள், கடும் சூட்டாதரவுடன் கிழக்கில் சிங்களப்படை நகர்வுகளை மேற்கொண்டது. ஆனால் அதற்காக அவர்கள் கொடுத்த விலைகள் அதிகம். வடக்கில் மேற்கொள்ள முனைந்த இராணுவ ஆக்கிரமிப்பு மண்ணைக்கவ்வியது. சிங்களப்படைகள் ஆரம்பித்த போர் சிங்களப்படைகளின் இருப்பை கேள்விக்குறியாக்கியது. அதாவது யாழில் உள்ள இராணுவம் தனது இருப்புக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

யாழில் உள்ள படையினரின் ஒரே ஒரு வழங்கல் பதையான கடலும் (40,000 துருப்புக்களை வான்வழி வழங்கல் மூலம் தக்கவைக்க சிங்கள அரசால் முடியாது) அடிக்கு மேல் அடிவாங்கி மூச்சிழுக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதாவது இந்த ஒரு வருடச்சமரை ஏன் நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்துவிட்டதாக கருதுகிறோம்?

இதற்கு ஆதாரமாக இரண்டாம் ஈழப்பரின் ஓராண்டு நிறைவையும், மூன்றாம் ஈழப்போரின் ஓராண்டின் நிறைவையும் ஓப்பிட்டு பார்த்தல் பயனுள்ளது.

  • இரண்டாம் ஈழப்போரின் ஒருவருடத்தில் (10.06.1990 - 10.06.1992) சிங்களப்படை இழந்தவை: கண்காணிப்புக்கப்பல் - 01, சியாமாச்செட்டி குண்டுவீச்சு விமானம் - 01, ஏறத்தாள 2600 துருப்புக்கள்.
  • மூன்றாம் ஈழப்போரின் ஒரு வருடத்தில் (19.04.1995 - 19.04.1996) சிங்களப்படை இழந்தவை: கட்டளைக்கப்பல்கள்-02, பீரங்கிப்படகுகள் (Shangai class)-02, டோரா-03, ரோந்துப்படகு-01, அவ்ரோ-02, புக்காரா-01, MI-17 -01, Y-8 -01, அன்ரனோவ் - 02, டாங்கிகள் - 05, ஏறத்தாழ 2,100 துருப்புக்கள்.
  • உக்கிரமற்ற நாலாம்கட்ட ஈழப்போரின் ஒரு வருடத்தில் சிங்களப்படை இழந்தவை: கட்டளைக்கப்பல்-01, டோரா-07, ரோந்துப்படகு-02, கிபீர்-01, டாங்கிகள்-12, 1,600-க்கும் மேற்பட்ட துருப்புக்கள்.

மேற்கூறப்பட்ட இழப்புக்களை பார்க்கும் போது புலிகளின் வலிமை எத்தகையது என ஓரளவு ஊகிக்க முடிவதுடன் உக்கிரமற்ற போரின் உக்கிரமும் விளங்கும்.

ஏனெனில் பிரகடனப்படுத்தப்படாத இந்த ஒருவருடப் போரில் புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மட்டும் தான் மேற்கொண்டுள்ளார்கள். அதாவது கனரக ஆயுதங்களையோ, ஏவுகணைகளையோ அதிகளவில் பாவிக்க முனையவில்லை என்பது ஒருபுறம். தற்காப்புத்தாக்குதல்கள் தவிர்ந்த பெரும் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பது மறுபுறம். போர்நிறுத்தம் என்ற சங்கிலியால் ஒரு கை கட்டப்பட்ட நிலையில் சமர்பூ¢ந்துள்ளார்கள் என சுருக்கமாக கூறலாம்.

சிங்கள அரசின் கடற்படை இந்த ஒரு வருடத்தில் சந்தித்த இழப்புக்கள் ஈழப்போர் வரலாறுகளுடன் ஒப்பிடும் போது மிக அதிகம். அதாவது குறுகிய காலத்தில் இழந்த பயிற்றப்பட்ட படையினரதும், வலிமையான கலங்களினதும் இழப்புக்கள் மிக அதிகம். மூன்றாம் ஈழப்போர் எப்படி சிங்கள தரைப்படையையும், விமானப்படையையும் முடக்கியதோ அதே போன்று நாலாம் கட்ட ஈழப்போரின் முழுமையான ஆரம்பம் கடற்படையை வலுவிழக்க செய்துவிடும் என்பது தான் நிகழ்வுகளின் சுருக்கம்.

இன்று அழிவைநோக்கி உள்ள தனது துருப்புக்களை காப்பாற்றுவதற்காக கொத்துக் கொத்தாக அப்பாவி மக்களையும், தெரிந்தெடுத்த மக்களின் பிரதிநிதிகளையும் கொன்று குவிக்கிறது அரசு. அதாவது இந்த ஒரு வருடத்தில் அரசின் இராணுவ முனைப்புக்கள் எல்லாம் எதிர்வினையாகிப் போனதும், சிங்கள அரசு மெல்ல மெல்ல சர்வதேச விதிமுறைகளில் இருந்து விலகிப்போகும் ஒரு பயங்கரவாத அரசாக மாறிக்கொண்டு இருப்பதும் உண்மை. அரசிற்கு முண்டுகொடுத்துவந்த மேற்குலகத்திற்கும், சில ஆசியநாடுகளிற்கும் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குலகை பொறுத்தவரை தங்கள் மீது மூன்றாம் உலக நாடுகள் கொண்டுள்ள கொஞ்ச நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் கண்டனங்கள், கவலைகள், குயடைநன ளுவயவந என்ற பிரகடனம், மனித உரிமை அமைப்புக்களின் சாடல்கள் எல்லாம். மகிந்தவின் ஆட்சியின் வருட முற்பகுதியில் புலிகள் மீது வீழ்ந்த அழுத்தங்கள் பிற்பகுதியில் அரசை நோக்கி திரும்பத்தொடங்கியுள்ளன. ஆனால் இந்த அழுத்தங்கள் செயல்வடிவில் எவ்வளவு காத்திரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் தான் அமைதிமுயற்சியின் ஆயுட்காலம் தங்கியுள்ளது. எனவே மேற்குலகின் ஏட்டுச்சுரக்காயால் தற்போதைக்கு பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.

எனினும் சர்வதேசத்தினதும், சர்வதேச அமைப்புக்களினதும் இத்தகைய கண்டனங்களும், அறிக்கைகளும், புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களும், புலிகளின் தாக்குதல்களும், முறிந்துபோன பேச்சும், அதிகரித்த பாதுகாப்புச்செலவும் சிங்கள அரசின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அதாவது அரசால் ஆரம்பித்த வலிந்த போர் அதன் பொருளாதாரத்தின் அத்திவாரத்தை ஆட்டம்காண வைத்துள்ளது. வேறுவிதமாகக் கூறின் சாதாரண சிங்கள மக்கள் போரின் சுமையை சுமக்கப்போகிறார்கள்.

அரசு தனது பொருளாதாரம் முன்னேற்றமாக உள்ளது என காட்டும் அறிக்கைகள் எல்லாம் போலியானவை என்பது பொருளியல் வல்லுனர்களின் கருத்து. இந்த பொருளாதாரத்தை சீர்செய்யாது மகிந்த சிந்தனையை தெற்கில் நடைமுறைப்படுத்த முடியாது.

அதாவது இந்த ஒரு வருடத்தில் மகிந்தவின் இராணுவக்கனவு எதிர்வினையாகியதால் தென்னிலங்கையில் ஏற்பட்ட பலவீனம், சர்வதேசத்தில் சிங்கள அரசு மீது ஏற்பட்டுள்ள அதிதிருப்தி, பொருளாதார நெருக்கடி போன்றவை மகிந்தவின் அரசியல் செல்வாக்கை தென்னிலங்கையில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதில் எதிர்க்கட்சிகளினதும், கூட்டணி கட்சிகளினதும் பங்கும் காத்திரமானது அதாவது மகிந்தா¢ன் செல்வாக்கை சரிப்பதற்கு போர் தான் சரியானவழி என அவர்கள் கணிப்பிட்டு அதற்கு ஏற்ப மகிந்தரை உசுப்பேத்தி விட்டிருந்தனர். மாவிலாறை நோக்கி படையெடுத்த கெல உறுமய, நீல அல்லி பிரச்சாரம் மேற்கொண்ட ஜே.வி.பி, மகிந்தரின் போர் நடவடிக்கை வெற்றிகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்ற சஜீத் பிரேமதாசாவின் (ஐ.தே.க) கூற்று என்பன இதையே எடுத்தியம்புகின்றன.

வரலாறும் இதைத்தான் கூறி நிற்கின்றது. 1977 இல் ஜே. ஆரின் திறந்த பொருளாதாரக்கொள்கை சிங்கள அரசின் பொருளாதாரத்தை சிங்கப்பூரை விட அதிகளவில் உயர்த்தும் எனவும் ஐ.தே.கவை அசைக்க முடியாது எனவும் தென்னிலங்கை கனவுகண்டது. ஆனால் ஜே.ஆரின் போர்வெறி அவரை இறுதியில் அநாதை பிணமாக்கியது.

1989 இல் அதிகாரத்திற்கு வந்த பிரேமதாசாவின் '2000 ஆம் ஆண்டில் எல்லோர்க்கும் புகலிடம்" என்ற கோசம் தென்னிலங்கையில் பட்டி தொட்டியெல்லம் எதிரொலித்தது. ஆனால் அரைகுறை ஆட்சியில் அவர் நடுத்தெருவில் உயிரைவிட்டது தமிழ் மக்கள் மீது தொடுத்த போரினால்.

1994 இல் பதவிக்கு வந்த சந்திரிகா அம்மையார் சிங்கள தேசத்தின் அதிர்ஸ்ட தேவதையாக மின்னினார். ஆனால் அவர் கொட்டிய போர்முரசு அவரை அரசியல் அநாதையாக்கியதுடன். தனது உயிரை காப்பாற்ற இன்று உலகெங்கும் ஓடவேண்டிய நிலைக்கும் கொண்டு சென்றுள்ளது.

இவை எல்லாம் அவர்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடிய போரின் விளைவுகள் தான். இந்த வரலாற்றை சீர்தூக்கிப் பார்க்க மறுத்த மகிந்தவிற்கு கடந்து போன ஆண்டு நல்ல படிப்பினையை கொடுத்திருக்கும் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இதை மேலும் உதறித்தள்ளியவராக மகிந்தரின் வரும் ஆண்டுகளும் அமையின் ராஜபக்ஷ என்ற சொல்லை தென்னிலங்கை அரசியலில் இருந்து அழிக்கக்கூடிய வல்லமை ஈழப்போருக்கு உண்டு என்பதை காலம் கற்பிக்கும்.

- அருஸ் (வேல்ஸ்) -

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

Sunday, November 05, 2006

ஜெனீவா சொன்ன செய்தி என்ன?

ஜெனீவா அமைதிப்பேச்சு தமிழ் மக்களால் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறலாமா? அது தவறானது அன்னிய தேசத்தின் இதயசுத்தியுள்ள அழுத்தங்கள் சிங்கள அரசு மீது இறுகும் வரையில் அல்லது சிங்கள அரசின் போரிடும் வலுவை முற்றாக அழிக்கும் வரையில் அதனுடன் பேசுவதில் பயனில்லை என்பது தழிழீழத்தில் முளைத்த புல்லுக்கும் தெரியும்.

இந்தப் பேச்சுக்களை ஆவலாக எதிர்பார்த்தவர்கள் ஒன்று சர்வதேசம் என தம்மை அழைத்துக்கொள்ளும் சில மேற்குலக நாடுகளும், ஆசிய நாடுகளும். இரண்டாவது சிங்கள அரசு (இதை நம்புவதற்கு உங்களுக்கு கடினமாக இருக்கும்).

இந்த இருதரப்புக்கும் பலத்த ஏமாற்றத்தை ஜெனீவாப் பேச்சுக்கள் கொடுத்திருக்கும் என்பது தான் உண்மை. புலிகளின் மீது அழுத்தங்களையும் தடைகளையும் போட்ட இணைத்தலைமை நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அந்த அழுத்தங்களின் ஊடாக ஐக்கிய இலங்கை என்னும் பகட்டு வார்த்தைக்குள் ஒழிந்துள்ள தழிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வை திணிக்க முனைந்து நின்றன. அதன் வெளிப்பாடுகள் தான் சிங்கள அரசு தமிழீழத்திற்குரிய நிலத்தை ஆக்கிரமிக்கும் போது மெளனம் காப்பதும், புலிகளின் தற்காப்பு பதில் தாக்குதலில் சிங்களப்படை புறமுதுகிடும் போது பதறியடித்துக்கொண்டு ஓடி வருவதும் அறிக்கை விடுவதும்.

அதாவது புலிகளை அமைதிப்பேச்சு என்ற சொல்லைக்கொண்டு கட்டிவிட்டு அழுத்தங்கள், படுகொலைகள் மூலம் இன விடுதலையை மழுங்கடித்து விடுவது. இது தான் சில மேற்குலக நாடுகளினதும், ஆசிய நாடுகளினதும் தந்திரம். சிங்கள அரசுகளை பொறுத்தவரை தனது பொருளாதார தேவைகளுக்கும், அரசியல் நலன்களுக்குமாக தமிழ் மக்களையும் அவர்களது விடுதலை போரையும் பயன்படுத்தி வருவதுண்டு.

அதாவது இராணுவ நடவடிக்கைகள் மூலம் தெற்கில் தன்னை ஒரு சிங்கள பேரினவாதிகளின் காவலனாக காட்டி வாக்கு வங்கிகளை அதிகரிப்பது ஓருபுறம், பேச்சுக்களில் ஆர்வமாக இருப்பது போல் பாசாங்கு செய்து சர்வதேச உதவிகள் மூலம் தனது நிதி வறட்சியை ஈடுசெய்வது மறுபுறம்.

அண்மையில் மகிந்தருக்கும் ரணிலுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் கூட இருகட்சிகளும் தமக்குரிய சர்வதேச ஆதரவை தக்கவைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பதற்குமாகவே செய்யப்பட்ட ஒப்பந்தம் பேரினவாதிகளை மீறி இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு எதையும் வழங்கப்போவதில்லை.

தென் ஆசியாவின் பிராந்திய வல்லரசு எனப்படும் இந்தியா இலங்கையுடன் செய்திருந்த இந்திய-இலங்கை ஓப்பந்தத்தின் இறுதியாக எஞ்சியிருந்த வடக்கு-கிழக்கு இணைப்பைக்கூட பிரித்து இந்தியாவின் முகத்தில் கரியைப் பூசிய சிங்கள பேரினவாதிகளின் முன் ரணில்-மகிந்த ஒப்பந்தம் எம்மாத்திரம்? அன்றைய அரைகுறை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்குக் கூட சிங்கள அரசின் வான்பரப்பில் அத்துமீறி நுளைந்து உணவுப்பொதிகளை வீசி தனது படையின் பலத்தை கொண்டு சிங்கள அரசை மிரட்டியிருந்தது இந்திய அரசு. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் இன்று எஞ்சியிருப்பது என்ன?

சாதாரண ஒரு சிங்கள அரச ஆதிக்கமுடைய நீதித்துறையினால் கிழித்து எறியக்கூடிய ஒப்பந்தத்தை தமிழ் மக்களுக்கு அதிக உரிமைகளை கொடுக்கும் ஒரு ஒப்பந்தமாக பிரகடனப்படுத்தி அதை நிறைவேற்ற புலிகள் தடையாக உள்ளார்கள் என்று தமிழ் மக்களின் மீது கொடிய போரை கட்டவிழ்த்து விட்டது இந்திய அரசு. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் கொன்று குவித்திருந்தது. ஆனால் இன்று கிழித்து எறியப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இந்திய ஆட்சியாளர்களின் கருத்து என்ன?

இவை மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்களால் குப்பையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ஏராளம். இனப்பிரச்சனைத் தீர்வுக்கென அமைக்கப்பட்ட குழுக்கள் ஏராளம். கூடிய கூட்டங்கள் எண்ணுக்கணக்கற்றவை இவற்றை நம்பி ஏமாந்த தமிழ்க்குழுக்களும் உண்டு. ஆனால் எந்த ஒரு தீர்வோ அல்லது தீர்வுக்குரிய அறிகுறியோ தென்படாதது ஏன்??

தென்பகுதி அரசியல் கட்சிகள் தமது அரசியல் பொருளாதார வரட்சியை ஈடுசெய்வதற்கு கூடும் கூட்டங்களை இனப்பிரச்சனை தீர்வுக்குரிய கூட்டங்களாகவும், குழுக்களாகவும் அர்த்தப்படுத்துவதுண்டு. அதனை சில ஆசிய நாடுகளும், சில மேற்குலக நாடுகளும் தீர்வைத்தரப்போகும் மிகச்சிறந்த நடவடிக்கையாக பாராட்டுவதும் அறிக்கை விடுவதும் வழமை. இது தமது பிராந்திய ஆதிக்கத்தை நினைவுபடுத்தவும், இந்து சமுத்திரத்தில் தமக்கு அக்கறை உண்டு எனக் காட்டுவதற்குமாக அந்தந்த நாடுகளின் முயற்சி. சில நாடுகள் இலங்கையில் நடக்கும் போரின் உண்மை நிலையைக்கூட விளங்க முற்படாது அறிக்கைகள் வெளியிடுவதுண்டு.

நோர்வேயின்; சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சரும் அமைதிப் பேச்சிற்கான அனுசரனையாளருமான எரிக் சொல்ஹெய்ம்; கருத்து கூறும்போது, பேச்சுக்கள் வெற்றியளித்தால் ஒதுக்கப்பட்ட பெருமளவு உதவித்தொகை சிங்கள அரசுக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இது தான் பேச்சுக்கு நிபந்தனை விதித்த ரம்புக்வெலவை குத்துக்கரணமடிக்க வைத்த மர்மம் இந்த உதவித்தொகை ஏறத்தாழ நாலரை பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது சிங்கள அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி இதை பெற்றுவிட வேண்டும் என்று தான் ஜெனீவாப் பேச்சுக்கு முன்னர் அவசர அவசரமாக மகிந்த, ரணிலை அரவணைத்தது. நிமால் ஸ்ரீபால டீ சில்வா அரசியல் தீர்வைப்பற்றி பேசப்போகிறோம் என அடிக்கடி அறிக்கை விட்டதும் இதற்காகத்தான்.

அமைதிப்பேச்சை காரணமாக்கி சிங்கள அரசு நிதியைப்பெற்று அதில் பெருமளவை போருக்கு செலவு செய்யப்போகின்றது என்பது தான் உண்மை. அதன் வெளிப்பாடு தான் அண்மைய பாதுகாப்புச்செலவு ஒதுக்கீடான 139.5 பில்லியன் ரூபாய்கள். இவ்வளவு நம்பிக்கையீனமான பேச்சிற்கு புலிகள் ஏன் சென்றார்கள்?

ஓன்று இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தல், இரண்டாவது சிங்கள அரச பயங்கரவாதத்தால் அன்றாடம் அல்லற்படும் மக்களின் துயரத்தை உலகிற்கு எடுத்து சொல்லுதல் ஆறு இலட்சம் மக்களை ஒரு திறந்த சிறைச்சாலை போன்ற குடாவிற்குள் அடைத்துவிட்டு அரைகுறை உணவைப் போட்டு சித்திரைவதைகளும் படுகொலைகளும் புரியும் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொண்டு வருவதும் அதற்கு சர்வதேசத்தின் எதிர்வினைகள் எப்படியாக இருக்கப்போகின்றன என்பதையும் அறியும் முயற்சி. எனவே ஜெனிவாவில் ஏற்பட்ட தோல்வி சிங்கள அரசிற்கும் அதன் தோழமை சக்திகளுக்கும் கிடைத்த தோல்வி என்பதே யதார்த்தம்.

போர்நிறுத்தத்தை பொறுத்தவரை முற்று முழுதாக பொது மக்களின் பாதுகாப்புக் கருதி உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் அவலங்களை கண்காணிப்புக்குழுவோ, சமாதான அனுசரணையாளரான நோர்வேயோ அல்லது இணைத்தலைமை நாடுகளோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. நோர்வேயின் சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம்;;, யப்பான் நாட்டுப் பிரதிநிதி அகாசி, ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் எல்லோரும் சமாதான முயற்சிகள் முன்னகராது விட்டால் இருதரப்பும் பொருளாதார, அரசியல் ரீதியிலான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிக்கை விட்டிருந்தார்கள்.

இங்கு இருதரப்பின் மீதான அழுத்தம் என்பது பொய்யானது ஏனெனில் புலிகள் மீது தடைகள், பயணத்தடைகள் என எல்லா அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே புலிகளின் மீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்க இனிமேல் ஏதுவுமில்லை. ஆகவே சிங்கள அரசுமீது அழுத்தங்கள் போடப்படலாம் என்பதே உள்ளார்ந்த கருத்து. ஆனால் வெறும் வாய்வார்த்தைகள் ஒன்றும் செய்யப்போவதில்லை. சர்வதேச நாடுகள் அமைதி வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க விரும்பினால் சிங்கள அரசு மீது செயல்வடிவில் பிரயோகிக்கும் பொருளாதார அரசியல் அழுத்தங்கள் தான்; அதற்கு ஒரேவழி.

சர்வதேசம் இதை செய்யத்தயாரா? என்பது தான் இன்றைய முக்கிய கேள்வி. இதற்கான பதிலில் தான் போரா சமாதானமாக என்பதும் தங்கியுள்ளது.

எந்தவித அழுத்தங்களும் போடப்படாமல் சிங்கள அரசை வழிக்கு கொண்டுவர முடியாது. சிங்கள அரசுக்கு மட்டுமல்லாது உலகெங்கும் இருந்த இனவாத அரசுகளையும் இப்படிப்பட்ட அழுத்தங்கள் மூலமே பணியவைத்தது வரலாறு.

உதாரணமாக யப்பானை எடுத்தால் வடகொரியா அணுகுண்டுப் பரிசோதனை செய்து இருவாரங்களில் அதன் மீது ஐ.நா சபையில் அழுத்தங்களை கொண்டுவர எடுத்த அக்கறையை போல நான்கரை வருடங்களாக அமைதிப்பேச்சு என்ற போர்வையில் இன அழிப்பையும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுள்ள சிங்கள அரசுமீது மேற்கொண்டது கிடையாது.

வடகொரியா வெடித்த அணுக்குண்டினால் எத்தனை பேர் பலியானார்கள்? வடகொரியா தற்போது தான் பரிசோதனையை செய்துள்ளது இன்னும் ஓரு பத்து அல்லது இருபது வருடங்களில் யப்பானை அச்சுறுத்தலாம் அல்லது அச்சுறுத்தாமலும் இருக்கலாம். ஆனால் தினம் தினம் ஒரு இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கு வாய்வழி அழுத்தங்களை பிரயோகிக்கும் யப்பான் வடகொரியா மீது இருவாரங்களில் செயல்வடிவில் அழுத்தங்களை இட்டது எப்படி?

15,000 மக்களுக்கான நீர்விநியோகம் 15 நாட்கள் தடைப்பட்டதை மனிதாபிமான பிரச்சனையாக்கி உலகெங்கும் பிரச்சாரப்படுத்திய சிங்கள அரசு நீரை திறந்துவிட்ட பின்னரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு மக்களுக்கு நீர் வழங்கவென மாவிலாறை ஆக்கிரமித்துக்கொண்டது. ஆனால் இன்று ஆறு இலட்சம் தமிழ் மக்களுக்குரிய உணவையும், இயல்பு வாழ்க்கையையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி பெரும் இன அழிப்பை மேற்கொள்ள முனைந்து நிற்கின்றது.

அமைதிப் பேச்சிற்கு முன்னோடியாக மக்களின் இயல்பு வாழ்கையை சீர்செய்யுங்கள் என்றுதான் புலிகள் கேட்டார்கள். ஆனால் சர்வதேசத்திற்கு முன்னால் வைத்து தமிழ் மக்களுக்குரிய மனிதாபிமான பிரச்சனையை கூட தீர்க்க முடியாது என கூறிவிட்டது அரசு. தமிழ் மக்கள் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் ஜெனீவா - 01 இல் ஒப்புக்கொண்ட விடயங்களில் எதை நிறைவேற்றியது சிங்கள அரசு?

சரி, தற்போது பதையை திறக்க அரசு ஓப்புக்கொண்டுள்ளது என வைத்துக்கொள்வோம். நாளைக்கு புலிகள் செல் அடித்து விட்டார்கள் என்று கூறிக்கொண்டு அதை இழுத்து மூடாது என்பது என்ன உறுதி? தற்போது நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள், விமானத்தாக்குதல்கள் எல்லாவற்றிற்கும் புலிகள் ஆட்டிலறியால் தாக்கிவிட்டார்கள், துப்பாக்கியால் சுட்டுவிட்டார்கள் என பொய்யான காரணங்களை கூறிக்கொண்டு தானே மேற்கொள்கிறது. உண்மை நிலையை சென்று பார்க்க சிங்கள அரசு அனுமதிக்கவில்லை என்று சாக்குப்போக்கு கூறிக்கொண்டு கொழும்பில் குந்தியிருக்கிறது கண்காணிப்புக்குழு.

அதாவது, அமைதிப் பேச்சிற்குரிய அடிப்படை காரணியான போர்நிறுத்தத்தை சிங்கள அரசு மதித்து நடாக்காத வரை அமைதி வழியில் எதுவும் சாத்தியப்படப் போவதில்லை. அப்படியொரு நிலைக்கு சிங்கள அரசை வர வைப்பதற்கு சர்வதேச நாடுகளின் பொருளாதார அரசியல் அழுத்தங்கள் அவசியம். இறைமையுள்ள நாடு என சிங்கள தேசத்திற்கு முத்திரை குத்த முடியாது ஏனெனில் அது சிங்களவர்களுக்கு மட்டுமே இறைமையுள்ள நாடு. தமிழ் மக்களை பொறுத்தவரை அது ஒரு பயங்கரவாத அரசு. அதாவது ஒரு இரத்தம் தோய்ந்த ஜனநாயக நாடு (Democracy with Blood).

ரோடேசியாவில் (1968) இருந்து சேர்பியா (மென்ரோநீக்குரோ-2006) வரைக்கும் ஒவ்வொரு இனவாத அரசுகள் மீதும் சர்வதேச நாடுகள் விதித்த அரசியல் பொருளாதார அழுத்தங்கள் தான் அந்த நாடுகளில் இனப்போரை முடிவுக்கு கொண்டுவந்தன. சர்வதேசம் இறைமையுள்ள நாடுகள் மீது அழுங்களை போடுவதில்லை போன்றதான தோற்றப்பாட்டை இலங்கை விடயத்தில் கைவிட வேண்டும்.

ஈராக், ஈரான், வடகொரியா, சீனா, சிரியா, யுகோஸ்லாவாக்கியா, ரூவாண்டா, சோமாலியா, சூடான், சிரோலியோன் இவை எல்லாம் இறைமையுள்ள நாடுகள் தான். இவற்றின் மீது பொருளாதார, அரசியல் உட்பட பல்வேறு அழுத்தங்களை ஐ.நாவும், மேற்குலக நாடுகளும் விதிக்கவில்லையா?

பொருளாதார அழுத்தங்கள் அடிமட்ட சிங்களவர் தொடக்கம் மேல்தட்டு சிங்களவர் வரைக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் போது தான். அமைதி தீர்வுக்கு சிங்கள தேசம் உளப்பூர்வமாக சம்மதிக்கும்.

அப்படியரு நிலையை ஏற்படுத்தும் பொறுப்பு சர்வதேசத்தை சார்ந்தது, சர்வதேசத்தை அந்த நிலைக்கு நகர்த்தவும் நாம் செயலாற்ற வேண்டும். மேலும் தமிழ் மக்களும் சிங்கள அரசின் பொருளாதார வளங்களையும், வளர்ச்சியையும் முடக்க வேண்டும். 'சிறுதுளி பெருவெள்ளம் என்று சொல்வார்கள்" அதேபோலவே ஒவ்வொரு தமிழ் மக்களும் செயலாற்ற வேண்டிய நேரம் இது.

ஐப்பசி 18 ஆம் நாள் காலியில் நடந்த தாக்குதல் உல்லாசப்பயணத்துறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது வீழ்ச்சி அடைந்துள்ள சிங்கள அரசின் சர்வதேச விமானக்கட்டணத்தின் மூலம் உங்களுக்கு தெளிவாக பூ¢யும். நாமும் எந்த எந்த வழிகளில் தமிழ்மக்களின் மூலம் சிங்கள அரசு வருமானத்தை பெறுகின்றது என்பதை அறிந்து கொண்டு தடுத்துநிறுத்த வேண்டும்.

ஏனெனில் சிங்கள அரசு சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை ஜெனீவாவில் வைத்து சொல்லியுள்ளது. அதாவது 'மனிதாபிமான (உயிர் வாழ்வதற்குரிய) அடிப்படை வசதிகளைக்கூட தனது அரசியல், படை நலன்களுக்கு அப்பால் விட்டுத்தர சிங்கள அரசோ, பேரினவாத சிங்கள மக்கள் கூட்டமோ தயாரில்லை" என்பது தான்.

எமது படை பலத்தையும், பொருளாதார வளத்தையும் பெருக்கிக்கொண்டு புலிகளுடன் ஒன்றிணைந்து மக்கள் சக்தியாக சிங்களப்படைகளை தோற்கடிப்பதன் மூலம். நாம் தான் ஏ-9 பாதையை திறக்கவேண்டும். அப்போது தான் அது நிரந்தரமாக எப்போதும் யாராலும் மூடப்படாத பாதையாக திகழும்.

சிங்கள அரசின் நீதித்துறையால் பி¡¢க்கப்பட்ட வடக்கையும், கிழக்கையும், படைப்பலத்தால் பிரிக்கப்பட்ட கலாச்சார நகரத்தையும், இதயபூமியான வன்னி மண்ணையும் மக்கள் சக்தி என்னும் பலம் கொண்டு நாம் இணைத்திட வேண்டும்.

அப்படியொரு நிலைவரும்போது சர்வதேசம் எமக்கு பின்னால் அணிவகுக்கும் என்பதுடன் சிங்கள அரசுக்கும் போரிட வலு இருக்கப்போவதில்லை. இது தான் ஜெனீவா எமக்கு சொன்ன அழுத்தமான செய்தி.
-அருஸ் (வேல்ஸ்)-

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்