Friday, January 26, 2007

வாகரையில் தவறாகிப்போன மதிப்பீடும் இலக்கும்

வாகரைப் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமையானது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டனரா?- விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இராணுவச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்ற கேள்விகளைப் பலர் கேட்கக் காரணமாகியுள்ளது.

வாகரைப் பிரதேசத்தின் முக்கியத்துவம், கிழக்கில் ஒரு பிரதேசத்தின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் இழந்துள்ளமை போன்ற விடயங்களே இக்கேள்விகள் எழுவதற்கான முக்கியமான காரணியாகும். மேல் சொன்ன காரணங்களின் அடிப்படையில் பார்க்கப் போனால், வாகரைப் பிரதேசத்தை விட்டு விடுதலைப் புலிகள் வெளியேறியமை புலிகளுக்குப் பின்னடைவு அல்ல எனக் கூறிவிட முடியாது.

ஏனெனில் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பிரதேசம் கைமாறிப் போவது என்பதும், கிழக்கிற்கான தொடர்பாக, அதாவது மட்டக்களப்பிற்கான கடல்வழித் தொடர்பிற்கான மார்க்கமாக இருந்த ஒரு பகுதி இல்லாது போயுள்ளமை என்பது சிறிதளவேனும் பின்னடைவாகவே பார்க்கப்படும். ஆகையினால் இப்பிரதேசத்திற்காக விடுதலைப் புலிகள் தொடர்ந்து போரிட்டிருத்தல் வேண்டுமா? அவ்வாறு போரிடுதல் எந்தளவிற்கு இராணுவ ரீதியில் ஏற்புடையதாக இருக்க முடியும்? என்பவை இங்கு எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாகும்.

வாகரைப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத்தினருக்குச் சுமார் நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. வேறுவிதமாகக் கூறுவதானால், ஜயசிக்குறு நடவடிக்கையின் போது இராணுவம் விட்டுச்சென்ற பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கென நான்கு மாதங்கள் போரிட வேண்டியதாகியது.

அது மட்டுமன்றி நூற்றுக்கு மேற்பட்ட படையினரை இழக்க வேண்டியதாகவும், நூற்றுக்கணக்கான படையினர் காயமடைய வேண்டியதுமானதொரு நிலையும் இராணுவத்தரப்பிற்கு ஏற்பட்டிருந்தது. அதாவது கைவிட்டுச் சென்ற பிரதேசம் ஒன்றை மீளக் கைப்பற்றுவதற்காகச் சிறிலங்கா இராணுவம் எதிர்பார்த்ததற்கும் மேலாக விலை கொடுக்க வேண்டியதாக இருந்தது.

யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் இருதரப்பினரதும் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்ற ரீதியில் வடக்கிலும் கிழக்கிலும் பிரதேசங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவே ஒழிய, வடக்கில் வரையறை செய்யபட்டது போன்று கிழக்கில் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் வரையறை செய்யப்பட்டதாக இல்லை.

இதனால் யுத்த நிறுத்த காலத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டதும் உண்டு. அதாவது சிறிலங்கா ஆயுதப்படையினர் சில வேளைகளில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை எனக் கூறியதும் உண்டு. அதேபோன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுப் பகுதி என்றும் கூறியதுண்டு.

தற்பொழுது வாகரையை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பினும், அதன் கட்டுப்பாட்டை இராணுவம் எந்தளவிற்குக் கொண்டிருக்கப் போகின்றது· கொண்டிருக்க முடியும் என்பதைப் பொறுத்தே வாகரையை ஆக்கிரமித்தமை பொருத்தமானதொரு இராணுவ நடவடிக்கைதானா? என்ற முடிவிற்கு வரமுடியும்.

இனி வாகரை தொடர்பான நடவடிக்கைகளுக்கு வருவோம். வாகரையைக் கைப்பற்றுதல் என்ற சிறிலங்கா அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் இராணுவம் செயற்படத் தொடங்கியதும் அதற்குப் பல வழிகள் கைக்கொள்ளப்பட்டன. இதில் முக்கியமானது அப்பிரதேசத்தில் பெரும் மனித அவலத்தைத் தோற்றுவித்து அப்பிரதேசத்தில் இருந்து மக்களை வெளியேற்றுதல் என்பது இதற்கென அரச தரப்பு இரண்டு வழிமுறைகளைக் கைக்கொண்டது.

1. உணவுப் பொருள், மருந்துப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள், சேவைகள் என்பனவற்றை முற்றாக முடக்குதல்.

2. பா¡¢ய இன அழிப்பு நடவடிக்கையாக விமான மற்றும் தொடர் எறிகணை வீச்சுக்களை மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்துதல்.

ஒக்ரோபர் மாதத்தின் ஆரம்பத்தில் வாகரையைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவம் நடவடிக்கைகளைத் தொடங்கியதும் வாகரைப் பிரதேசத்திற்கான தரை வழிப்பாதையான ஏ-15 பாதையை மூடியது இதன்மூலம் மக்களின் போக்குவரத்து உட்பட அப்பிரதேசத்திற்கான அனைத்து விநியோகங்களும் முடக்கப்பட்டன.

ஒக்ரோபாரின் ஆரம்பத்தில் மேற்கொண்ட முற்றுகையை அடுத்து நவம்பர் மாத இறுதிப் பகுதியில் ஒரு தடவை மட்டும் மிகக் குறைந்த அளவிலான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அவையும் சர்வதேச நிவாரண அமைப்புக்களின் பெரும் முயற்சிகளிலேயே சாத்தியமாகியது.

அதன் பின்னர் இராணுவம் வாகரைப் பிரதேசத்திற்குள் நுழையும் வரை அதாவது ஆக்கிரமிக்கப்படும் வரை அத்தியாவசியத் தேவைப் பணிகள் முடக்கப்பட்டவையாகவே இருந்தன. சிறிலங்கா அரசு மக்களின் அத்தியாவசிய தேவைகளை யுத்தத்தின் ஒரு கருவியாக்கிக் கொண்டது.

அடுத்ததாக, வாகரைப்பிரதேசத்தின் மீது சிறிலங்கா இராணுவமும், விமானப்படையும் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலினால் பெரும் மனித அவலமே தோற்றுவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு, பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் மருத்துவ வசதி கிட்டாததால் மரணமடைந்தனர்.

இதேசமயம் வாகரை வைத்தியசாலைப் பகுதியைத் தாக்குதலற்ற சூனியப்பிரதேசமாக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக வாகரை வைத்தியசாலையும் அதன் வளாகப் பகுதியும் தாக்குதலுக்கு உள்ளானதில் பலர் காயமடைய வேண்டியதாயிற்று.

அதாவது பெரும் மனித அவலத்தைத் தோற்றுவித்து மக்களை வெளியேற்றுதல் என்பது அரசின் உறுதியான கொள்கையாக இருந்தது. இதன் வழிமுறையாக ஒருபுறத்தில் பட்டினி போட்டு மக்களைக் கொல்லுதல் மற்றொரு புறத்தில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் மக்களை அழித்தொழித்தல் என்பதாக இருந்தது.

இந்நிலையில் வாகரை வைத்தியசாலைப் பகுதி மீதும் சிறிலங்கா இராணுவம் தாக்குதல் தொடர்வதற்குத் தீர்மானம் மேற்கொண்டமை உணரப்பட்டதையடுத்து, வாகரையில் இருந்து வெளியேறுதல் என்பது தவிர்க்கப்படமுடியாத தொன்றாகியது. அதாவது சிறிலங்கா அரசு இராணுவ ரீதியில் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தவும், இனப்படுகொலை புரியவும் தயாராகிவிட்ட நிலையில் வாகரையில் இருந்து வெளியேறுதல் என்பது மக்களைக் காக்கும் நடவடிக்கையில் ஒன்றாகியது. அதாவது பெரும் இன அழிவில் இருந்து மக்களைக் காப்பதென்பதும் விடுதலைப் புலிகளின் கடமையாகியது.

இந்த வகையில் வாகரைப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க சிறிலங்கா அரசும், அதன் இராணுவமும் கூட்டாக மேற்கொண்ட இவ் வழிமுறை சர்வதேச விதிகளுக்கு மாறானதாகும். அத்தோடு வாகரைப் பிரதேசத்தின் மீதான சிறிலங்கா அரசின் நடவடிக்கையானது சிறிலங்கா அரசு தனது இராணுவ ரீதியிலான இலக்கை நிறைவேற்றிக் கொள்ள எத்தகைய மனித அவலத்தையும் இன அழிப்பு நடவடிக்கைக்கும் தயாராகவுள்ளது என்பதை சர்வதேச சமூகம் பூ¢ந்து கொள்ளவும் விளங்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் கொடுத்துள்ளது எனின் மிகையாகாது.

இதேசமயம் இத்தகைய வழிமுறையும், நடவடிக்கைகளும் வாகரையை ஆக்கிரமிக்க அவர்களுக்கு உதவியதாக இருப்பினும் இராணுவ ரீதியில் சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடு, சரியானதா? இலக்குகள் எட்டப்பட்டனவா? என்பவையே வாகரை ஆக்கிரமிப்பின் பயனைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

வாகரை குறித்து சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடென்பது கிழக்கில் விடுதலைப் புலிகள் குறித்த மதிப்பீட்டின் ஒரு பகுதியாகவே கொள்ளத்தக்கதாகும். அவ்வாறானால் இம்மதிப்பீடு சரியானதா? என்பதே இன்றுள்ள கேள்வியாகும். அதாவது இராணுவத்தின் மதிப்பீட்டின்படி வாகரை நடவடிக்கை முற்றுப்பெற்றதா? என்பதே ஆகும்.

வாகரை குறித்த- அதாவது கிழக்குக் குறித்த சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடானது ஒட்டுக்குழுவான கருணா குழுவையும் ஒரு அங்கமாக இணைத்துக்கொண்டதாகவே இருந்தது. அதாவது இவ் ஒட்டுக்குழுவின் வெளியேற்றத்தால் இராணுவம் பெற்றுக்கொண்ட அனுகூலம் இவ் ஒட்டுக்குழு இராணுவ நடவடிக்கையின் போது ஆற்றக்கூடிய பங்களிப்பு என்பனவற்றுடன் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது.

இதன் பிரகாரம் வாகரைப் பிரதேச ஆக்கிரமிப்பில் இவ் ஒட்டுக்குழுவையும் இணைத்தே சிறிலங்கா இராணுவத்தரப்பு முதலில் திட்டமிட்டது. இதன் பிரகாரம் ஒக்ரோபர் ஆரம்பத்தில் (06.10.06) மேற்கொண்ட ஆரம்பகட்ட நடவடிக்கையில் ஒட்டுக்குழுவும் இராணுவத்துடன் சேர்ந்து களத்தில் இறங்கியது. ஆனால், விடுதலைப் புலிகள் கொடுத்த பதிலடியில் இராணுவத்திலும், ஒட்டுக்குழுவிலுமாக 30 இற்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதன் மூலம் சிறிலங்கா இராணுவத்திற்கு ஒட்டுக்குழு மீதான நம்பிக்கை அற்றுப்போனது. தமது மதிப்பீடு குறித்து மீள் பா¢சீலனை செய்யவேண்டியதாயிற்று.

அடுத்ததாக வாகரையைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட பல முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் அதிகாரிகள் சிலரும் பலியாகியிருந்தனர். குறிப்பாக மாங்கேணி கட்டளை அதிகாரி உட்பட பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் சில சண்டைகளில் சடலங்களையும் விட்டு விட்டு இராணுவம் தப்பி ஓட வேண்டியதாயிற்று.

அதாவது வாகரையில் விடுதலைப் புலிகள்; குறித்த இராணுவத்தின் மதிப்பீடு தவறாகியது இத்தோல்விகளுக்குக் காரணம் தேட விளைந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வானிலை பாதகமாக இருந்ததாகவும் கடல் கொந்தளிப்பாக இருந்ததாகவும் இயற்கை மீது பழியைப் போட்டார்.

ஆனால் அப்பிரதேசத்தில் அக்காலப்பகுதியில் நிலவிய வானிலையும் கடற்கொந்தளிப்பும் பருவ காலத்திற்குரியவையே. அதாவது வழமைக்கு மாறான நிகழ்வாகவோ இடைக்கிடை ஏற்படும் வானிலை செயற்பாடாகவோ இருக்கவில்லை. ஆகையினால் இராணுவத் தளபதி தமது மதிப்பீட்டுத் தவறிற்கு பருவகால வானிலையைக் காரணமாகக் கூறியமை அவரின் தவறான மதிப்பீட்டிற்கான நொண்டிச்சாட்டே.

அடுத்ததாக சிறிலங்கா இராணுவம் பெரும் மனித அவலத்தைத் தோற்றுவிக்கத்தக்கதான பா¡¢ய தாக்குதல் திட்டத்துடன் வாகரையின் வடக்கிலும் தெற்கிலும் மும்முனைகளில் தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து மனிதப் பெரும் அவலத்தையும் தடுக்கும் நோக்கிலும், விடுதலைப் புலிகள் இழப்பின்றியும் வாகரையை விட்டு வெளியேறியமையானது சிறிலங்கா இராணுவத்தரப்பிற்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றமாகவே இருக்கமுடியும்.

சிறிலங்கா அரச தரப்பிற்கு ஆதரவான இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் உட்பட பல விமர்சகர்கள் விடுதலைப் புலிகள் தந்திரோபாயமாகப் பின் வாங்கிக்கொண்டனர் என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். அதாவது இராணுவம் விடுதலைப் புலிகளை முறியடித்தோ தோற்கடித்தோ வாகரைப் பிரதேசத்தைக் கைப்பற்றவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

எடுத்துக் காட்டாகக் கூறுவதானால் யாழ். குடாநாட்டின் மீது ¡¢விரச நடவடிக்கையை ஆரம்பித்தபோது எவ்வாறு புலிகள் நடந்து கொண்டார்களோ அவ்வாறே நடந்துகொண்டார்கள். சிறிலங்கா இராணுவத்தினர் மக்களும் விடுதலைப் புலிகளும் வெளியேறிய வாகரைக்குள்ளேயே புக முடிந்தது.

ஆனால் வாகரையை நோக்கிய படை நடவடிக்கை சிறிலங்காப் படைத்தரப்பு சில இலக்குகளைத் தெளிவாகவே கொண்டிருந்தது. அதில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலுவைக் குறைத்தல், அதாவது அழித்தல் முக்கியமானது. ஆனால் வாகரையில் அது நிறைவேறவில்லை.

இதேசமயம் வாகரைப் பிரதேசத்தின் மீதான படை நடவடிக்கைகளின் போது இடம்பெறும் எனச் சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை என்றே கூறலாம். அதாவது வாகரையின் முக்கியத்துவம் கருதி அதனைத் தக்க வைப்பதற்காக விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து பெரும் ஆளணியினரை வாகரைக்கு நகர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு இராணுவத் தரப்பிற்கு இருந்தது.

சிறிலங்கா அரசினதும் இராணுவத் தளபதியின் தற்போதைய திட்டமானது கிழக்கில் பெரும் களமுனைகளைத் திறத்தலின் மூலம் விடுதலைப் புலிகளை கிழக்கிற்கு இழுத்து பொருத்தமற்ற பெளதீக மற்றும் பண்பாட்டுச் சூழலில் யுத்தத்தை நடத்தி தோற்கடித்தல் ஆகும். இதன் மூலம் இராணுவச் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது அதன் எதிர்பார்க்கையாகும். ஆனால் சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தினதும் அன்றி சிறிலங்கா அரசினதும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விடுதலைப்புலிகள் செயற்படவில்லை. இதனால் சிறிலங்கா இராணுவத்தலைமையின் எதிர்பார்ப்பும் இந் நடவடிக்கை மூலம் நிறைவேறவில்லை.

சில இராணுவ ஆய்வாளர்களும் வேறு சிலரும் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறியதையும் வாகரையில் இருந்து வெளியேறியதையும் ஒப்பிட முடியுமா எனக் கேள்வி எழுப்பவும் கூடும். ஆனால் யுத்தத்தை எவரும் தமக்குச் சாதகமான சூழலில் நடத்துவதே வெற்றிதரக்கூடிய நடவடிக்கையாக அமையும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அத்தோடு இராணுவம் கிழக்கில் புலிகளைத் தோற்கடிப்பதன் மூலம் வலுச்சமநிலையை மாற்றலாம் என எதிர்பார்ப்பின் புலிகள் வேறு ஒரு பகுதியில் வெற்றிபெறுவதன் மூலமும் வலுச்சமநிலையை மாற்றலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அது யதார்த்த பூர்வமானது. அவ்வாறு இல்லாதுவிடில் நெப்போலியனதும் ஹிட்லரினதும் தோல்வி ரஷ்யாவில் அதாவது மொஸ்கோ படையடுப்பில் ஏற்பட்ட தொல்விகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்க முடியாது.
-ஜெயராஜ்-
ஈழநாதம் நாளேட்டுக்காக எழுதியது

நன்றி: தமிழ்நாதம்

Wednesday, January 10, 2007

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

கானமயிலாட அதனைப் பார்த்த வான்கோழி தானும் ஆடியதாம்
-அருஸ் (வேல்ஸ்)-

விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நிகழ்த்தவில்லை ஆனாலும் சிங்களப்படைகளின் விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் தொடர்கின்றன. அதற்கான காரணமும் கூறப்படுகின்றது. புலிகள் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டனர், புலிகளின் கனரக ஆயுதங்களை அழிக்கிறோம், புலிகளின் கனரக ஆயுதங்கள் இராணுவ முகாம்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை எனும் காரணங்களை கூறிக்கொண்டு சிங்களப்படைகளின் இனப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இடம்பெற்று வரும் இந்தப் போருக்கும் முன்பு நடைபெற்ற ஈழப் போர்களுக்கும் அதிகளவிலான வேறுபாடுகளை யாரும் காணமுடியாது. ஆனாலும் முக்கிய சில வேறுபாடுகள் உண்டு. ஒன்று முற்று முழுதாக சமாதானம் முறிந்துவிடாத நிலையில் இடம்பெறும் போர். இரண்டாவது தற்போது இடம்பெறும் போர் அதிகளவான சர்வதேசத்தின் கவனத்தை பெற்றிருப்பது.

சர்வதேசத்தின் கவனம் அதிகளவில் குவிந்துள்ள நிலையிலும் சிங்கள தேசம் தனது படுகொலைகளையோ, கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களையோ அல்லது அப்பட்டமான மனித உரிமை மீறல்களையோ சிறிதளவேனும் குறைத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கவலைகளை வெளியிட்டும், போரை நிறுத்துமாறு கூறியும், மனித நேயமுள்ள சில மேற்குலக நாடுகள் சிங்கள அரசின் போக்கில் அதிருப்தி அடைவதாக கூறியும் அரசின் காதில் ஏறவில்லை.

இது எதனைக் காட்டுகின்றது? வாய்மூலமான அழுத்தங்கள் எதற்கும் உதவப்போவதில்லை என்பது ஒருபுறமிருக்க, சிங்கள தேசம் தன்னையும் தனது படைகளையும் ஒரு கற்பனைக் கோட்டில் வைத்து கனவு கண்டுகொண்டு செயற்படுகின்றது என்பது தான் யதார்த்தம்.

அதாவது சிங்கள தேசம் தன்னை ஒரு இஸ்ரேலாகவும் (நீங்கள் சிரிக்கக் கூடாது), தனது படைகளை இஸ்ரேலியப் படைகளுக்கும் ஒப்பிட்டும் போரை நடத்திக்கொண்டு இருக்கிறது. இதனை நான் சொல்லவில்லை. தென்பகுதி ஊடகங்களினதும் பெரும்பாலான இனவாதிகளின் கானல் நீர் சிந்தனைகள் அது தான்.

இஸ்ரேலியப் படைகளை பொறுத்தவரை தமது படைவீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டால் கூட அதன் விமானப்படையின் நவீன கு-16 ரக விமானங்களும், அப்பாச்சி உலங்குவானூர்திகளும் பலஸ்தீனத்தின் ஒரு கிராமத்தையோ அல்லது நகரத்தின் ஒரு பகுதியையோ தரைமட்டமாக்கிவிடுவதுண்டு.

அங்கு இடம்பெற்று வரும் பொதுமக்களின் இழப்புக்களை அவை கவனத்தில் கொள்வதில்லை. ஐ.நாவும் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு எதையும் பெரிதாக செய்யப்போவதில்லை. வேறு நாடுகள் கண்டனத்தீர்மானங்களை கொண்டுவந்தால் அதை அமெரிக்கா தடுத்து விடும். இது தான் அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு உள்ள அனுகூலங்கள். இராணுவ ரீதியான அனுகூலங்களை பொறுத்த வரையில் எதிர்த்தரப்பு மிகவும் பலவீனமானது.

தற்போது தென்பகுதி இனவாத ஊடகம் ஒன்றின் உள்ளக்குமுறலை பார்ப்போம் 'தனது ஒரு படைச்சிப்பாய் கொல்லப்பட்டாலும் இஸ்ரேல் பலஸதீன மக்களின் மீது கடுமையான குண்டுவீச்சுக்களை மேற்கொள்ள தயங்குவதில்லை. அதேபோல நாமும் பின்பற்றுவதன் மூலம் புலிகளை அழிக்க முடியும்". இது தான் பேரினவாத அரசிற்கு இனவாத தென்னிலங்கை ஊடகம் கொடுத்த ஆலோசனை.

இதன் பின்னர் கடந்த ஆண்டு ஏப்பிரலில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல், கடற்படை மீதான தாக்குதல் என்பவற்றிற்கு வஞ்சம் தீர்ப்பதற்கு சிங்கள விமானப்படை தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசியபோது அதனை இஸ்ரேலுக்கு ஒப்பிட்டு இந்த ஊடகங்கள் ஆனந்தக்கூத்தும் ஆடியிருந்தன.

எனினும் இந்த ஊடகங்கள் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கா மீதான தாக்குதலின் பின்னர் சிங்கள விமானப்படை ஏன் தமிழ் மக்களின் மீது குண்டு வீசவில்லை என கேள்வி எழுப்பியதுடன், அரசு சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்து விட்டது எனவும் இராணுவத்தில் இரண்டாம் நிலை அதிகாரியின் மரணத்திற்கு மெளனமாகியது அவமானமானது எனவும் தெரிவித்திருந்தன.

மேலும் சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு கடந்த வருடம் லெபனானை தரைமட்டமாக்கிய இஸ்ரேலை போல சிங்கள தேசம் நடந்து கொள்ளவில்லை எனவும் தமது ஆதங்கத்தை தெரிவித்திருந்தன.

அதனுடன் மட்டும் நின்றுவிடாமல் விடுதலைப் புலிகளில் ஒரு இரண்டாவது அல்லது மூன்றாம் நிலை உயர்மட்டத்தலைவர் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் உங்களை (சிங்கள அரசை) சாம்பலாக்கி இருப்பார்கள் என்றும் தமது அடிமனது மரண பயத்தை வெளிக்காட்டவும் தவறவில்லை. அதாவது தமது படைகளை இஸ்ரேலியப் படைகளுக்கு ஈடாக கற்பனை பண்ணுவதை தான் தென்பகுதி ஊடகங்கள் முழு மூச்சாக தற்போது செய்து கொண்டிருக்கின்றன.

இவற்றை எல்லாம் ஒருபுறம் தவிர்த்தால் இன்று மகிந்தவுடன் சேர்ந்து போரை முன்னின்று நடத்துபவர்களில் முதன்மையான இருவரும் தமது வாழ்நாளில் மிகுதிப்பகுதியை அமெரிக்காவில் கழிக்க இருப்பவர்கள்.

ஓன்று போரினை ஆரம்பித்தவரும் அதற்கு திட்டங்களை வகுப்பவருமான கோத்தபாய ராஜபக்ச. இவர் யாழ். கோட்டை முகாமை சிங்களப்படைகள் இழந்த பின்னர் அமெரிக்காவில் சென்று குடியேறியவர். தற்போது மீண்டும் தலைகாட்டியுள்ளார். ஆட்சி மாறினால் அல்லது அண்ணாவின் ஆட்சி தடம்புரண்டால் அல்லது போரில் தோல்வியுற்றால் மீண்டும் அமெரிக்காவிற்கே சென்றுவிடுவார்.

இரண்டாவது கோத்தபாயவினால் வழிநடத்தப்படும் போரை களத்தில் நகர்த்தும் சிங்கள அரசின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா. இவர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு ஏதுவான கிறீன் கார்ட் வீசா பெற்றவர். அதாவது போரின் வெற்றி தோல்வி இவரை பாதிக்கப்போவதில்லை தனது பதவிக்காலம் முடியும் போது. போரில் ஈட்டிய பணத்தை எடுத்துக்கொண்டு, தனது மனைவி மற்றும் இரு புதல்விகளுடன் அமெரிக்கா சென்றுவிடுவார்.

இதில் கோத்தபாயவை பொறுத்தவரை நீண்டகாலம் அமெரிக்காவில் வாழ்ந்தவர். அந்த நாட்டின் தொலைக்காட்சிகளில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளையும், விமானக்குண்டு வீச்சுக்களையும் அதிகம் கண்டு கழித்திருப்பார். எனவே தமது படைகள் இராணுவ நடவடிக்கைகளில் தோல்விகளை சந்தித்தாலும் விமானக்குண்டு வீச்சுக்களில் அதே பாணியை பின்பற்ற முனைந்து நிற்கின்றார்.

சம்பூர் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த மகிந்த, திருமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பில் சம்பூரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருந்தார். ஆனால்; அன்று இணைத்தலைமை நாடுகள் காட்டிய மெளனம் அவர்களின் அனுமதியாகவே மகிந்தருக்கு எண்ணத்தோன்றியது. இவை தான் சிங்களப்படைகளின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களிற்கான காரணிகளிற் சில.

கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.07) மன்னாரில் உள்ள இலுப்பைக்கடவையில் குண்டுவீசி 17 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த செய்தி தணியும் முன்னர் திருமலையின் வெருகல் பகுதியில் ஜனவரி 03 ஆம் நாளும், முல்லைத்தீவில் ஜனவரி 04 ஆம் நாளும் விமானக்குண்டு வீச்சை நிகழ்த்தியுள்ளது சிங்கள விமானப்படை. சிங்களப்படையின் இந்த திமிர்த்தனமான போக்கிற்கு அதன் கற்பனைகள் தான் காரணம்.

ஆனால் களநிலவரம் அதற்கு எதிர்மறை. சிங்கள அரசு இஸ்ரேலும் இல்லை விடுதலைப் புலிகள் அதற்கு குறைந்தவர்களும் அல்லர். ஏனெனில் சிங்களப் படைகளை போல ஒரு தாக்குதலில் ஆயிரம் படைகளை இஸ்ரேல் இழந்தது கிடையாது. இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்கு சிங்கள தேசம் நிகராகவும் முடியாது. இஸ்ரேலின் இராணுவ வலிமைக்கு எதிராக பெரும்படை கொண்டு மோதி படைவலுச்சமநிலை கண்டதும் அங்கு நடக்கவில்லை. இஸ்ரேலின் மீதுள்ள அமெரிக்காவினதும், மேற்குலகினதும் கரிசனை போல சிங்கள தேசத்திற்கு கிடைக்கப்போவதும் இல்லை.

கற்பனைகளை விட்டு நிஜத்திற்கு சிங்கள தேசம் வருமானால் பல விடயங்கள் தெளிவாகும். படைக்கட்டமைப்பு, போர்க்கள நுட்பம், புலனாய்வு வலையமைப்பு, ஒருங்கிணைந்த நடவடிக்கை என இஸ்ரேலின் படை நுட்பங்களுக்கு இணையனவர்கள் புலிகள் தான் என்பது புரியும். இவற்றை விட புலிகளின் அர்பணிப்புத்தன்மைக்கு உலகில் எவரும் ஈடாக முடியாது என்பதும் உண்மை.

1980 களின் நடுப்பகுதியில் இருந்து சிங்கள அரசிற்கு இஸ்ரேலும், ஏனைய முன்னனி நாடுகளும் ஆயுத வழங்கல், தொழில்நுட்பம், பயிற்சி, புலனாய்வு போன்ற நடவடிக்கைகளில் உதவியே வந்துள்ளன. ஆனால் அவை எல்லாம் புலிகளின் விடுதலைப் போரின் முன் மண் கெளவியது ஏன் என இன்னமும் சிங்கள அரசிற்கு புரியாத புதிராக இருப்பது ஆசசரியமானதே.
அமெரிக்கா என்ற வல்லாதிக்க நாடு நிதி உதவி, ஆயுத உதவி என அள்ளிக்கொடுக்க வளர்ந்தது இஸ்ரேல். ஆனால் எந்த ஒரு நாட்டின் உதவிகளும் இல்லாமல் தமது சொந்த மக்களை மட்டும் நம்பி வளர்ந்தது தான் புலிகளும் விடுதலைப்போரும். தம்மிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டும் கொண்டு சிங்களப்படைகளுக்கு எதிராக விஸ்பரூபம் எடுத்த புலிகளை இஸ்ரேலைவிட உயர்ந்த ஆளுமையும், ஆற்றலும் உள்ளவர்கள் என்று கூறினால் அது தவறாகாது.

இறுதியாக ஒன்றைக் கூறி முடித்துக் கொள்கிறேன், நான் வட அயர்லாந்தில் வாழ்ந்த காலத்தில் அங்கு வாழும் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தமது போராட்டங்கள், அதன் பரிணாமங்களை பற்றி சொல்வார்கள். நானும் எமது இனத்தின் விடுதலைப்பேரை பற்றி சொல்வேன்.

ஒரு தடவை வட அயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Queen's Univerity of Belfast) விரிவுரையாளர் ஒருவருடன் உரையாடும் போது எமது தேசியத்தலைவர் தொடர்பான சில தகவல்களை கூறினேன். ஆசசரியம் அடைந்த அவர் உங்களது தலைவர் இங்கு எப்போதாவது வந்துள்ளாரா என கேட்டார். இல்லை, ஏன் என நான் வினவினேன். அதற்கு அவர் உங்கள் தலைவரை பார்க்க ஆசைப்படுகிறேன் எனக்கூறியதுடன். தங்களுக்கு இப்படி ஒரு தலைவர் கிடைக்கவில்லை என ஏக்கமாக கூறினார்.

உண்மை தான். மிகவும் பழமை வாய்ந்த விடுதலைப் போர்களில் வட அயர்லாந்து போரும் ஒன்று. அவர்களின் போராட்டத்திற்கு ஓரு காலகட்டத்தில் அமெரிக்கா கூட தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. ஆனாலும் அவர்களால் முழுமையான வெற்றியை பெறமுடியாது போனதற்கு முக்கிய காரணியாக தமக்கு கிடைத்த ஆளுமையற்ற தலமைத்துவத்தை தான் அந்த மக்கள் கருதுகிறார்கள். அதாவது தமது போராட்டம் இக்கட்டான கட்டங்களை அடைந்த போது அதை எதிர்கொள்ளும் ஆற்றல் தமது தலைமையிடம் இருக்கவில்லை என்பது அவர்களின் கருத்து.

ஆனால் எமக்கு கிடைத்த ஒப்பற்ற தலைமைத்துவம் தான் எமது விடுதலைப்போ¡¢ன் விரைவான நகர்வுக்கு காரணம். உலக விடுதலைப் போர்களுடன் ஒப்பிடும் போது எமது விடுதலைப் பயணத்தின் வேகம் அதிகம் (வல்லாதிக்க நாடுகளின் தலையீட்டால் விடுதலை அடைந்த நாடுகளை இங்கு கருதவில்லை). இதற்கு விடுதலைப்போர் சந்தித்த ஓவ்வொரு இக்கட்டான சூழ்நிலைகளையும் எமது தலைமைத்துவம் மிகச் சாதுர்யமாக நகர்த்திய விவேகம் தான் முக்கியமானது.

தற்போது தோன்றியுள்ள போரும் சமாதானமும் என்ற நெருக்கடியான நிலமையும், அதை தனக்கு சாதகமாக்கும் சிங்கள அரசின் தந்திரமும் விரைவில் மாற்றி அமைக்கப்படும். தன்னை கான மயில் என நினைத்து துள்ளியாடும் வான்கோழிக்கும் விரைவில் தனது நிலை புரியும்.

நன்றி: தமிழ்நாதம்

Friday, January 05, 2007

மாமனிதர் குமார் பொன்னம்பலம் - நினைவு தினம் இன்று

அல்லற்படும் தமிழினத்தின் அவலங்களைப் போக்க ஆணித்தரமாகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் இன்று 7 ஆவது நினைவுதினம்

-அப்பாத்துரை விநாயகமூர்த்தி-

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 07 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும். இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரங்களால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அவர் கொலை செய்யப்படும் பொழுது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர் சட்ட வல்லுநர் மறைந்த ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார்.

அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியற் கோட்பாடுகளை ஏற்று இலங்கை வாழ் தமிழர்களது பிரச்சினைகளைத் திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு எல்லா வழிகளிலும் செயற்பட்டார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நாமத்தை உச்சரிக்கவே யாரும் அஞ்சித் தயங்கிநின்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதால் மட்டுமே தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்ற யதார்த்தத்தை பகிரங்கமாக வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களையே சாரும். மேலும் தமிழர்களின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதையும் இலங்கையிலும் சர்வதேசத்திலும் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் அமரர் குமார் அவர்களே.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்களையும் சர்வதேசத்திற்கு வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களையே சாரும். இதற்காக இலங்கை வாழ் தமிழர்கள் அவருக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அவரது இந்தக் கொள்கைகளால் அவரைக் கைது செய்யும் நோக்குடன் சந்திரிகா அம்மையாரின் அரசு இரகசியப் பொலிஸாரை அவரது வீட்டுக்கு அனுப்பி பல மணி நேரமாக விசாரணை செய்து அவரது வாக்கு மூலத்தைப் பெற்றது. செம்மணி புகழ் அம்மணி சந்திரிகா அம்மையார் தென்னாபிரிக்காவில் வைத்து "தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்" எனப் பேட்டியளித்த சம்பவத்தைக் கண்டித்த ஒரே தமிழ்த் தலைவர் குமாரே ஆவார். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்திரிகா அம்மையார் தொலைக் காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகளை கடுமையாகத் தாக்கிப் பேசி "புலிகளுக்கு ஆதரவாக இயங்குபவர்கள் கொழும்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்ற கருத்தில் பேசியிருந்தார். மறுநாட்காலை குமார் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு இனியும் தான் நீண்ட காலம் வாழ்வது கடினமென என்னிடம் கூறியிருந்தார். அவரின் கொலைக்கு சந்திரிகா அரசே பொறுப்பேற்க வேண்டும்.

குமார் பொன்னம்பலம் அவர்களது கொலைச் சம்பவத்தை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியான பந்துல விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையையும் கொலையோடு சம்பந்தப்பட்டவர்களின் விபரத்தையும் 2000 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமே ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்திருந்தும் அவர் எதுவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை,. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பல தடவைகள் நான் எனது கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தேன். தகுந்த தலைமையின்றி தமிழினம் அநாதையாக்கப்பட்டு படுமோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அவ்விடத்தை நிரப்பக் கூடிய தலைமகன் குமார் பொன்னம்பலமாகவே இருந்தார். அதனையும் கருத்தில் கொண்டு தான் அவர் கொலை செய்யப்பட்ட போது தமிழீழத்தின் அதியுயர் விருதான "மாமனிதர்" என்ற பட்டத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கிக் கௌரவித்தார்.

புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிய தொண்டுகளால் அவர்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இலங்கை அரசியல் சரித்திரம் எழுதும் போது ஜனநாயகக் கட்சிக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் (Democratic People's Alliance Manifesto) உருவாவதற்கு இவர் ஆற்றிய சேவை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இந்த விஞ்ஞாபனத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தினேஸ் குணவர்தனாவின் மக்கள் ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ், பல்கலைக்கழக மாணவர் முன்னணி முதலிய பல கட்சிகளும் சேர்ந்து உருவாக்கின. அதில் அனைத்து கட்சியினரும் கையெழுத்திட்டனர். இதை சிறிமாவோ அம்மையார் கைவிட்டிருக்காவிட்டால் தமிழர்களது பிரச்சினை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும்.

1985 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார். தமிழ் இளைஞர்களுக்கு அவர் ஆற்றிய சேவை இதுவரையாரும் ஆற்றியதில்லை. அவர் இறந்த போது களுத்துறைச் சிறைச் சாலையில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டமை இதை நிரூபிக்கிறது. அவர் மறைவதற்கு சற்று முன் தேர்தலை எதிர் நோக்கி தமிழ்ப் பகுதிகளில் போட்டியிடுவதற்கு ஒரு பட்டியலைத் தயாரித்திருந்தார். இதுவும் அவரது கொலைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். அவரைப் போல் இன்னொருவர் பிறக்கப் போவதில்லை.

மாமனிதர் அவர்கள் தன்னைப் பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறினார். "நீ உனது உயிரைப் பற்றிப் பயப்பட்டால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும், நீ வாயை மூடிக் கொண்டே வாழ வேண்டுமானால் அந்த வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? நான் ஒரு அடிமையாக வாழ்ந்து இனத் துவேசிகளும் ஆட்சியில் உள்ளவர்களும் கூறுவனவற்றிற்கு தலையாட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அவர்கள் விரும்புவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாவிடில் அவர்கள் கூறுவது எனது நம்பிக்கைக்கு எதிராக அமைந்தால் நான் ஏன் எனது மனச் சாட்சிக்கு எதிராக மௌனம் சாதிக்க வேண்டும்"

அவர், தான் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார் என்பதற்கு சுவர்ணவாகினியில் பின்வருமாறு கூறினார். "தமிழர் அரசியல் நிலை என்ன என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஆராய்ந்து பார்த்தேன். ஒரு புறம் பயங்கரமான சிங்கள அரசும் மறு புறம் ஒரு சதமும் பெறுமதியற்ற தமிழ்க் குழுக்களும் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்கள் சிங்கள அரசுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வந்தனர். எக் காரணத்தை முன்னிட்டு அவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்டு அறியுங்கள். அரசு அவர்களுக்கு பாதுகாப்பும் தனிப்பட்ட உதவிகளும் செய்கிறது. இத்தகைய சூழலில் தமிழ் மக்களின் அபிலாசையை முன்னெடுத்துச் செல்லும், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் ஒரு புறம் போராடிக் கொண்டு மறு புறம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலேயே நான் புலிகளை ஆதரிக்கிறேன்" என்றார்.
அல்லற்பட்ட தமிழினத்தின் அவலங்களைப் போக்கி அவர்களுக்காக ஆணித்தரமாகக் குரல் கொடுத்த ஆண்மகனின் குரல்வளை நசுக்கப்பட்டது. தமிழர்கள் ஒரு தலைவனை இழந்தனர். தமிழர்களுக்காக தன்னையே தியாகம் பண்ணி இந்தத் தரணியிலே அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் செய்த தொண்டுகளெல்லாம் தமிழர் தம் சரித்திரத்தில் நிலைத்திருக்கும். மறைந்தும் மறையாத அமரரின் புகழ் நீடு வாழி. அவரது 07 ஆவது சிரார்த்த தினமாகிய இன்றைய நாளில் அவனியிலே தமிழர்களுக்கு இனிமேலாவது ஓர் ஆறுதல் கிட்ட வேண்டும், அதற்கு அமரர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மா ஆசி வழங்கட்டும்.

நன்றி: தினக்குரல் 05/01/2007