Sunday, July 22, 2007

கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள் - தாயகன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான இனவெறியும் மதவெறியும் கொண்ட அரசாங்கத்தின் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது இதயங்களில் மாறா வடுவை ஏற்படுத்தி விட்ட `கறுப்பு ஜூலை' தின நிகழ்வுகளை நாளை (ஜூலை 23) அனுஷ்டிக்கின்றனர்.

1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஐ.தே.க.வினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு நாளையுடன் 24 வயதாகிறது.


தமிழ் மக்களின் மனங்களின் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கி விட்ட அந்த இனப்படுகொலை `கறுப்பு ஜூலை' என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள அதேவேளை, அந்த கறுப்பு ஜூலையே சிங்களத்தின் வீழ்ச்சிக்கும் அத்திபாரமாக அமைந்து விட்டது.

உலக நாடுகளையே உலுக்கிவிட்ட கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நடந்து நாளையுடன் 24 வருடங்களாகின்ற நிலையில் தற்போது ஆட்சி புரியும் மகிந்த அரசு மீண்டுமொரு கறுப்பு ஜூலையை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டு வருகின்றது.

`குள்ள நரி' என அழைக்கப்படும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் நெறிப்படுத்தலில் அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்கவின் வழிநடத்தலிலுமே படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.
கொழும்பிலுள்ள தமிழர்களின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்ற வெறியில் நடத்தப்பட்ட இந்த இனக்கலவரம் என்கின்ற இன அழிப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (அப்போதைய பெறுமதி) பெறுமதியான தமிழர் சொத்துகள் அழிக்கப்பட்டதுடன் ,2,500 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயப்படுத்தப்பட்டனர். உயிர் தப்பியோர் கப்பல்களில் ஏற்றப்பட்டு தமிழர் பகுதிகளான, வடக்கு கிழக்கிற்கு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர்.
1983 ஜூலை 23 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனப்படுகொலை 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. தமிழர்கள் வீதி, வீதியாக விரப்பட்டு வெட்டியும், சுட்டும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். பலர் குடும்பம் குடும்பமாக வீடுகளுடன் சேர்த்து கொளுத்தப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழரின் வர்த்தக நிலையங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு நீர்மூலமாக்கப்பட்டன.

4 நாட்களாக கொழும்பு வீதிகளில் தமிழர்களின் இரத்த ஆறு ஓடியது. அவலக்குரல்கள் உலக நாடுகள் வரை கேட்டபோதும் அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன மட்டும் மிகவும் அமைதியாக சிங்கள காடையர் கூட்டத்தின் கொலை வேட்டையை ரசித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்பு படைகளோ தமக்கிடப்பட்ட கட்டளையின் படி கொலைத்தாண்டவம் புரிந்த காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தன.

இனப்படுகொலைகள் நடந்து கோரமான ஐந்து நாட்களுக்கு பின்னரே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இனக்கலவரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் விளக்கமளித்தார்.

தொலைக்காட்சி உரையில் கூட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் ஜே.ஆர். வருத்தமோ, கவலையோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. மாறாக இனப்படுகொலையை நியாயப்படுத்தியே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.

1956 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இனக்கலவரம் வெடித்ததாகவும் இவ்வாறான மனக்கசப்புகள் இருக்கும் போது சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயல் என்றும் ஜே.ஆர். இனப்படுகொலையை நியாயப்படுத்தினார்.

அத்துடன் சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காக தான் புதிய சட்டமொன்றை அமுலாக்குவதாக ஜே.ஆர். கூறினார். ஜே.ஆர். பின்வருமாறு கூறுகிறார்,

சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்களுடைய இயல்பான வேட்கையை பூர்த்தி செய்வதற்காகவும் நான் ஒரு புதிய சட்டத்தை அமுலாக்குகிறேன். இப்புதிய சட்டத்தின் படி நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்களாக முடியாது. அது மட்டுமன்றி நாட்டுப் பிரிவினை கோரும் எந்தவொரு கட்சியும் தடை செய்யப்படும். இனிமேல் நாட்டைப் பிரிப்பது தொடர்பாக எவரும் சட்ட ரீதியாக செயற்பட முடியாது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கவே கொழும்பில் 2,500 இற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஜே.ஆர். தனது புதிய சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கும் சாவுமணி அடித்தார்.

ஜே.ஆரின் அப்போதைய செல்லப்பிள்ளையான காமினி திசாநாயக்க தனது இனவெறியை பின்வருமாறு வெளிப்படுத்தினார்.

"உங்களை தாக்கியது யார்? சிங்களவர்கள். உங்களை காப்பாற்றியது யார்? சிங்களவர்கள்'. ஆமாம், எங்களால் தான் உங்களை தாக்கவும் முடியும் காப்பாற்றவும் முடியும். உங்களை காப்பாற்ற இந்திய இராணுவம் இங்கே வருமாக இருந்தால் அதற்கு 14 மணித்தியாலங்கள் தேவை. ஆனால், 14 நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்போம்.

உங்களுடைய நெற்றிகளில் நீங்கள் ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றோ மட்டக்களப்பு தமிழன் என்றோ, மலையகத் தமிழன்தான் என்றோ இந்துத் தமிழன் என்றோ கிறிஸ்தவத் தமிழன் என்றோ எழுதப்படவில்லை. நீங்கள் எல்லோரும் தமிழர்கள் தான் என்று முழங்கியிருந்தார்.

இந்த கறுப்பு ஜூலையே தமிழர்களுக்கு சர்வதேச ரீதியில் ஒரு அங்கீகாரத்தை கொடுக்கப் போகின்றதென்பதை ஜே.ஆரோ, காமினி திசாநாயக்கவோ அறிந்திருக்கவில்லை.

1983 ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று `நியூயோர்க்-வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது.
`தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது கடினமென்றால் ஏன் பிரிந்து வாழமுடியாது? தமிழ் மக்களுக்கு தனி ஆட்சி கொடுத்தால் என்ன? ஐ.நா.வில் உள்ள பல நாடுகள் போல் தமிழ் மக்களும் தாங்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதற்குரிய சரியான சான்றுகளை வைத்துள்ளார்கள்.

இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் சிங்களவர் மட்டுமே அதிகாரங்களை வைத்திருக்கின்றார்கள். இந்த அதிகாரங்களை கொண்டுள்ள சிங்களவர்களுக்கு தமிழர்கள் இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் வாழ முடியாத அளவில் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற அறிவாவது உள்ளதா? என கேள்வியெழுப்பியிருந்தது.

ஆனால், அந்த அறிவு இன்று வரை சிங்களவர்களுக்கு வரவில்லை என்பதையே நடந்து வரும் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
1983 ஜூலையில் குறிப்பிட்ட 4 நாட்களுக்குள் ஐ.தே.க. நடத்திய வெறியாட்டத்தை தற்போதைய மகிந்த அரசு சற்று வித்தியாசமாக நடத்தி வருகின்றது. மகிந்த ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு அவசர கால தடைச் சட்டத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.தே.க. தனது இன வெறியாட்டத்தின் போது தமிழ் மக்களின் பொருளாதாரத்தையே இலக்கு வைத்து அழிந்தது. அதே திட்டத்தையே மேற்கொண்டு வரும் தற்போதைய அரசு அதையும் சற்று வித்தியாசமாகவே செய்கிறது.

அதாவது கொழும்பிலுள்ள பிரபல தமிழ் வர்த்தகர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, கோடிக்கணக்கான ரூபா கப்பம் பெறப்படுகின்றனர். சிலர் கப்பப் பணம் கொடுத்தும் இதுவரை வீடு திரும்பவில்லை. சில வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் பயங்கர நிலைமையில் தமிழ் வர்த்தகர்கள் சுதந்திரமாக தமது தொழிலை நடத்த முடியாதுள்ளனர். பலர் தமது தொழில்களை கைவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் தமது வர்த்தக நடவடிக்கைகளை வெகுவாகக் குறைத்து விட்டனர். எவ்வேளையிலும் தாம் கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாமென்ற அச்ச நிலையில் வர்த்தகர்கள் உள்ளனர். இதனால் வர்த்தகத்தில் முதலீடுகளை செய்ய முடியாதுள்ளனர்.

ஐ.தே.க. காடையர் கூட்டத்தை வைத்து செய்த வேலைகளை மகிந்த அரசு வெள்ளை வான்களையும் `கஜநாயக்கா'க்களையும் வைத்து செய்கின்றது.
அண்மையில் இரவோடு இரவாக கொழும்பு லொட்ஜ்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை மகிந்த அரசிலுள்ள ஜே.ஆர்.ஜெயவர்தனாக்களை மீண்டும் அடையாளம் காட்டும் நிகழ்வாகவே அமைந்தது.

அப்போது ஜே.ஆர். ஜெயவர்தனவின் இனவெறிக்கு அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி, சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றோர் பக்கபலமாக இருந்து அட்டூழியங்களை அரங்கேற்றியது போல் இன்று மகிந்த ராஜபக்ஷவுக்கு அவரின் சகோதரர்களும் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ஹெகலிய ரம்புக்வெல போன்றவர்களும் பக்கபலமாக செயற்படுகின்றனர்.

1983 கறுப்பு ஜூலைக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மன்னிப்புக் கோராததைப் போல் கொழும்பிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ எவ்வித மன்னிப்பையும் கேட்கவில்லை. அதிசயமாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மன்னிப்புக் கோரினார். ஆனால், அந்தத் தவறை நிவர்த்திப்பது போல் பிரதமர் மன்னிப்புக்கேட்பது தவறென குற்றம்சாட்டி சிறுபான்மையின அமைச்சரான ஜெயராஜ் தனது அரசு விசுவாசத்தை நிரூபித்தார்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பாரிய படை நடவடிக்கையொன்றை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து பல நூற்றுக்கணக்கானோரை படுகாயப்படுத்தி ஒரு இலட்சம் வரையான தமிழர்களை அகதிகளாக்கி கோடிக்கணக்கான சொத்துக்களை நாசமாக்கி விட்டே தொப்பிகல எனப்படும் குடும்பிமலையை இராணுவத்தினர் கைப்பற்றினர்.

தமிழ் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி குடும்பிமலையை கைப்பற்றிய அரசு அதனை பெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடி புளகாங்கிதம் அடைந்தது. இலங்கையின் இன்னொரு சுதந்திர தினமாக, இன்னுமொரு எதிரி நாட்டை கைப்பற்றிய வெற்றிவிழா போன்று இலங்கையின் கிழக்கிலே உள்ள சிறு வனாந்தர பகுதியான குடும்பிமலையை கைப்பற்றியது வெற்றிவிழாவாகக் கொண்டாடி தன்னை தரம் தாழ்த்திக் கொண்ட மகிந்த அரசு இனவெறியை மட்டும் தூபமிட்டது.

எனவே, 1983 ஆம் ஆண்டைப் போன்றதொரு அரசே அரியாசனத்தில் இருப்பதாலும் இன வெறியும், மதவெறியும் கொண்ட கட்சிகள் அரசுக்கு ஆதரவு கொடுப்பதாலும் மீண்டும் ஒரு இனப்படுகொலை இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் நிறையவேயுள்ளன.

நன்றி: தினக்குரல்

Sunday, May 27, 2007

குடாநாட்டில் திறக்கப்பட்ட புதிய களமுனை

சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் தற்போது ராடார்களின் சொற்பிரயோகங்களும் அதன் பாவனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதற்கான காரணியாக அமைந்தவர்கள் வான்புலிகளே.

அதாவது விடுதலைப் புலிகளின் வான், கடல் நடமாட்டங்களை அதிக செயற்திறனுடன் அவதானிப்பதற்காக சிறிலங்கா படையினர் தமது ராடார்களின் வலிமையை அதிகரிக்கும் அதே சமயம் அவற்றை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நிறுவி வருகின்றனர்.

இந்த அவதானிப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நெடுந்தீவும் ஒன்று. இது வடபகுதியில் யாழ். குடாநாட்டிற்கு தென்மேற்காக அமைந்துள்ள 7 தீவுகளில் உள்ள பெரிய தீவாகும். நெடுந்தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அதிக தொலைவில் அமைந்துள்ளதுடன் 70 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் உடையது. இந்த தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளபோதும் இந்தியாவின் தமிழ்நாட்டின் தெற்கு கரையான இராமேஸ்வரத்தில் இருந்து 38 கி.மீ தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தரைத்தொடர்புகள் அற்ற நெடுந்தீவை புங்குடுதீவில் உள்ள குறிகட்டுவான் படகுத்துறையில் இருந்து படகுகள் மூலமே அடைய முடியும். எனினும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பூநகரி மன்னார் பகுதிகளுக்கு அண்மையாக இருப்பதனாலும். இந்தியாவின் தமிழ் நாட்டின் தெற்கு கரைக்கு அண்மையில் இருப்பதனாலும், (அதாவது இராமேஸ்வரத்திற்கும் மன்னாருக்கும் இடையில் உள்ளதனால்) பூகோள ரீதியாக இது படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது.

அதாவது கண்காணிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சிறிலங்காவின் பெருமளவான படைபலம் குவிந்துள்ள யாழ். குடாநாட்டுக்கான மேற்குப்புற நுழைவாயிலின் எல்லையில் இது அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு வியூகங்களுக்காக தீவகப்பகுதிகள் பலப்படுத்தப்பட்ட போது நெடுந்தீவும் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் அதன் வடமுனையில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டது.

எனினும்; உக்கிரமடைந்த மோதல்களை தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கான விநியோகங்களை தடுக்கவும், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் ஊடாக இந்தியா செல்வதை தடுக்கும் நோக்குடனும் இந்த தீவின் தென்முனையில் கடற்படைத் தளமும் கண்காணிப்பு நிலையும் கடந்த வருடம் அமைக்கப்பட்டது.

இந்த தளத்தில் யாழ். குடாநாட்டில் படையினர் வசம் உள்ள ராடார்களில் மிக நவீனமான ராடார்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் உள்ள அதிக தூரவீச்சுக்கொண்ட ரடார்களின (Long-range Battlefield Suveillance Radars) உதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பூநகரி தொடக்கம் விடத்தல்தீவு வரையான பகுதிகளும் மன்னாரின் மேற்குப்புற கடற்பகுதிகளும் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்தது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் ஆரம்பமாகிய பின்னர் இந்த ராடார் நிலையத்தின் தேவை மேலும் அதிகரித்திருந்ததுடன், இலகுவாக நகர்த்தப்படும் வான்பாதுகாப்பு ராடார்களும (Mobile Air-Defence Radars) அங்கு நிறுவப்பட்டன. மன்னார் வான்பரப்பில் பறக்கும் விடுதலைப் புலிகளின் விமானங்களை அவதானிப்பதுடன், விடுதலைப் புலிகளின் விமானங்கள் மேற்கு வாசலின் ஊடாக குடாநாட்டுக்குள் ஊடுருவுவதை கண்காணிக்கும் பணியையும் அது மேற்கொண்டு வந்தது.

ஆனால் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடற்படை கண்காணிப்பு நிலையம் விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணியினரின் (Marines) தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதுடன், கண்காணிப்பு ராடார் நிலையமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஓரங்கமாக நாலாவது ஈழப்போரில் உருவாகிய ஈரூடகப் படையணி ஒரு மைல்கல் ஆகும். ஏனெனில் அதிகளவு கடற்பரப்பை கொண்ட சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு போர் முனைகளுக்கு இந்த படையணியின் தேவை அவசியமானது.

உலகின் வல்லமை மிக்க நாடான அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட எல்லா சமர்களிலும் அதன் ஈரூடகப்படையினரின் பங்களிப்புக்கள் முக்கியமானவை. உலகிலேயே அதிகளவான ஈரூடகப்படையினரை கொண்ட நாடாக விளங்குவதும் அமெரிக்கா தான். ஏறத்தாள 175,000 செயற்திறன் மிக்க ஈரூடக படையினருடன், 40,000 பின்னிருக்கை படையினரையும் அது கொண்டுள்ளது.

இந்த படையணியில் புலனாய்வுப் பிரிவு, ஆழ ஊடுருவும் பிரிவு, இலக்கை தேடி கண்டறியும் பிரிவு, தேடி அழிக்கும் பிரிவு, வான் எதிர்ப்பு துப்பாக்கி பிரிவு, நீரடிநீச்சல் பிரிவு என்பன உண்டு. நீரிலும் நிலத்திலும் சமர் புரியும் ஈரூடக படையணியானது கடற்படை மற்றும் தரைப்படையின் நகர்வுகள், நகர்வுகளுக்கான தடை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை 1995 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு முகாம் தகர்ப்பு, 1993 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பூநகரி தவளை நடவடிக்கை, 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடாரப்பு தரையிறக்கம் போன்றவற்றில் கடல் மற்றும் தரை சார் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திருந்த போதும் அது ஈருடகப்படையணியின் நடவடிக்கை கொள்ளப்படவில்லை.

எனினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் நாள் அதிகாலை மண்டைதீவு, அல்லைப்பிட்டி படைத்தளங்களையும், ஆட்டிலறிதளத்தையும் அழித்த நடவடிக்கையே ஈரூடகப்படையணி என்னும் சிறப்பு பயிற்சி பெற்ற படையணியின் முதலாவது நடவடிக்கையாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விரிவடையும் களங்களுக்கு ஏற்ப புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள இந்தப் படையணி குடாநாட்டின் சமர்களங்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் பூகோள ரீதியாக யாழ். குடாவானது அதிக கரையோரங்கள், தீவுகள், களப்புக்கள், குடாக்கள் கொண்ட பகுதி என்பதுடன் படையினரின் பெருமளவான படை நிலைகள் கரையோரங்களை அண்டியே அமைந்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை (24.05.2007) நடைபெற்ற தாக்குதலின் போது மன்னாரின் வடமுனையான விடத்தல்தீவு மற்றும் பூநகரி பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் தளங்களில் இருந்து கடற்புலிகளின் துணையுடன் புறப்பட்ட ஈரூடகப் படையணியினர் கடற்படையினரின் தலைமன்னார் நெடுந்தீவு கண்காணிப்பு நிலைகளின் பார்வையில் இருந்து சாதுரியமாக நகர்ந்து அதிகாலை 12.45 மணியளவில் நெடுந்தீவின் தென்முனையில் தரையிறங்கியதுடன் 20 நிமிட அதிரடித் தாக்குதலில் தளத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.

இந்த மோதல்களின் போது காரைநகர் கடற்படைத்தளத்தில் இருந்து உதவிக்கு விரைந்து சென்ற டோரா பீரங்கிப்படகுகளும், தலைமன்னார் கடற்படைத்தளத்தில் இருந்து சென்ற நீரூந்து விசைப்படகுகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இதில் ஒரு டோரா செயலிழந்ததுடன், மேலும் இரு படகுகள் சேதமடைந்துள்ளதாகவும், 35 படையினர் வரையில் பலியானதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் அரசு தமது தரப்பில் 04 பேர் கொல்லப்பட்டதாகவும் 04 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ மூன்று மணிநேரம் முகாமை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப் புலிகளின் ஈரூடகப்படையினர் படையினரின் நவீன ராடார் சாதனங்களையும், 0.50 கலிபர் கனரக துப்பாக்கிகள் - 03 உட்பட பெருமளவான ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு தளம் திரும்பிவிட்டனர். இந்த நடவடிக்கையில் ராடார் நிலையத்தை கைப்பற்றுவதே விடுதலைப் புலிகளின் பிரதான தாக்குதல் இலக்காக இருந்துள்ளது.

இங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் நீண்ட தூர கனரக துப்பாக்கிகள் கணிசமானவை. அதாவது ராடாரின் பாதுகாப்புக்கும், வான் எதிர்ப்புத் தாக்குதலுக்கும் என்றே அவை அங்கு குவிக்கப்பட்டிருந்தன. இந்த தளத்தின் நோக்கமும் அதுவே மேலும் ராடார் நிலையத்தின் பாதுகாப்பே அங்கு முதன்மைப்படுத்தப்பட்டும் இருந்தது. இந்த ராடார் நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் படையினரிடம் மேலோங்கி இருந்தது.

விடுதலைப் புலிகளின் இந்த தாக்குதலை தொடர்ந்து வடபோர்முனையின் தென்மராட்சிப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரில் ஏறத்தாழ 300-400 வீரர்கள் தீவுப் பகுதியை நோக்கி அவசரமாக நகர்த்தப்பட்டுள்ளதுடன் படையினரின் கவனமுமம் தீவுப் பகுதிகளை நோக்கி பரவலடைந்துள்ளது.

பல மைல் தூரம் கடலைக் கடந்து சென்று கடற்படைத் தளத்தை தாக்கிவிட்டு ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு விடுதலைப் புலிகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஈரூடகப்படையினரின் தீவுப்பகுதி மீதான இந்த இரண்டாவது நடவடிக்கை படையினரின் பாதுகாப்பு ஒழுங்கமைப்பில் பெரும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

அதாவது எதிர்காலத்தில் தீவகத்தில் உள்ள படையினரின் தளங்கள் மற்றும் அந்த தளங்களை பாதுகாக்கும் பாதுகாப்பு நிலைகள் போன்றவற்றிற்கு தேவைப்படும் படையினரின் எண்ணிக்கை மிக அதிகமாக போகின்றது. தீவகத்தில் ஏற்படும் பாதுகாப்பு அச்சறுத்தல் மன்னார் மற்றும் காரைநகர் தளங்களுக்கான நேரடியான அச்சுறுத்தல் என்பதுடன், அவற்றிற்கு இடையிலான தொடர்புகளும் துண்டிக்கப்படலாம்.

இது வடக்கிற்கான விநியோகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது. நெடுந்தீவு தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியும், இராணுவப் பேச்சாளருமாகிய மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தெரிவித்ததாவது: 'நெடுந்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கான அவர்களின் திட்டத்திற்கான ஒரு படிக்கல். விடுதலைப் புலிகள் நெடுந்தீவை தக்கவைத்திருந்தால் அது குடாநாட்டின் வடபகுதிக்கான விநியோகங்களை பெருமளவில் பாதிக்கும்" என தெரிவித்திருந்தார்.

கிளாலி, முகமாலை, நாகர்கோவில் என யாழ். குடாநாட்டின் தென்கிழக்கில் இறுகிப்போயுள்ள களமுனைகளில் படையினரின் கவனம் செறிவாகியபோது புதிதாக தென்மேற்கு திசையில் ஒரு களமுனை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு களமுனை நாளை பல களமுனைகள் ஆகலாம். ஆனால் அவற்றை பாதுகாக்கும் படைபலமும் விநியோக மார்க்கங்களும் படையினருக்கு உண்டா என்பது தான் இன்று எழுந்துள்ள முக்கிய கேள்வி.

அதாவது கிளாலி, முகமாலை, நாகர்கோவில் அச்சுக்கு இணையாக இந்த முனைகளை பலப்படுத்த வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டால் அது படையினருக்கு மிகுந்த நெருக்கடிகளை கொடுப்பதுடன் படையினரின் எல்லா முனைகளையும் பலவீனப்படுத்தி விடும்.

விடுதலைப் புலிகளின் படைப்பலத்தின் கவனத்தை திரும்பும் நோக்குடன் படையினர் புதிதாக அமைக்கப்பட்ட தமது 57 ஆவது வலிந்த தாக்குதல் படையணியினரை கொண்டு வவுனியா மன்னார் எல்லையில் புதிய களமுனை ஒன்றை திறக்க முயற்சித்து வரும் வேளையில் விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் தென்மேற்குப்புற வாசலில் புதிய களமுனை ஒன்றை திறந்துள்ளனர். இந்த களமுனை குடாநாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் என்று தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் மூத்த படையதிகாரி கூறியது அதன் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

-அருஸ் (வேல்ஸ்)-

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

Sunday, March 25, 2007

விடுதலைப் புலிகளின் கப்பல் பலம் அழிந்து வருகிறதா?

அண்மைய காலங்களில் சிறிலங்காவின் தென்பகுதி ஊடகங்களின் சூடான செய்திகள் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பானவை தான். அணிவகுத்து வரும் ஆயுதக்கப்பல்களை குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளுகிறது சிங்களக் கடற்படை. பின்னர் படங்களும் வெளியிடப்படுவதுண்டு. அதில் அழகான நீல வண்ணக் கடலில் கப்பல் கொழுந்து விட்டு எரிவதையும் பின்னர் மூழ்குவதையும் காண்டு தென்னிலங்கை பேரானந்தம் அடைவதுண்டு.

அதிலும் கடந்த 18 ஆம் நாள் அம்பாறை பொத்துவிலுக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இரண்டு கப்பல்களை ஒன்றாக மூழ்கடித்துள்ளது கடற்படை. ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட படங்களுக்கும் குறைவில்லை.

கடந்த செப்ரெம்பர் மாதம் 17 ஆம் நாளில் இருந்து பார்ப்போமாயின் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 6 கப்பல்களையும் றோலர்களையும் சிறிலங்கா கடற்படையினர் அழித்துள்ளதாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

- செப்டம்பர் 17 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் கிழக்குக் கடலின் கல்முனைப் பொயின்றில் வைத்து சந்தேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- ஒக்டோபர், 31 ஆம் நாள் 2006 மாலை மன்னார் கடற்பரப்பில் வைத்து சந்தேகத்திற்கிடமாக பெரிய றோலர் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- நவம்பர், 14 ஆம் நாள் 2006 மாலை 4.30 மணியளவில் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சந்தேகத்திற்கிடமாக பெரிய றோலர் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- பெப்ரவரி, 27 ஆம் நாள் 2007 காலை 6.30 மணியளவில் தெற்கு கடலின் தேவினுவர கடற்பகுதியில் வைத்து சநதேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- மார்ச், 18 ஆம் நாள் 2007 காலை 7.30 மணியளவில் கிழக்குக் கடலின் அறுகம்குடாவிற்கு அண்மையாக உள்ள பொத்துவில் கடற்பரப்பில் வைத்து சநதேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர். பின்னர் அதே பகுதியில் வைத்து அன்று மதியம் மற்றுமொரு கப்பலும் அழிக்கப்பட்டது.

இந்த கப்பல் அழிப்புக்களின் போது ஒரே மாதிரியான கதைகள் தான் கூறப்படுகின்றன. அதாவது பெருமளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் இந்த கப்பல்கள் சுமந்து வந்ததாகவும். கடற்படையினர் வழிமறித்த போது தமது அடையாளங்களை நீருபிக்கத் தவறியதாகவும் அதன் பின்னர் கலிபர் மற்றும் பீரங்கிகள் மூலம் படையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் தாக்குதலில் அது தீப்பற்றி எரிந்து மூழ்கியதாகவும் மூழ்கடிக்கப்பட்ட எல்லா கப்பல்களினதும் கதைகள் நீண்டு செல்கின்றன.

சிறிலங்காவின் புனைக்கதைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு யதார்த்தத்தை கவனித்தால் இது உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் கப்பல்களாக இருக்குமா? அப்படியானால் விடுதலைப் புலிகளிடம் உள்ள கப்பல்களின் பலம் என்ன? ஆயுதங்களை தருவிக்கும் போது அவர்கள் பயன்படுத்தும் உத்திகள் எவை? அவர்களின் முன்னேற்பாடுகள் எவை என்பவை தான் எம்முன்னால் உள்ள முக்கிய வினாக்கள்.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் அவர்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பது குறித்து இலகுவில் அறிந்து கொள்ள முடியாதது உண்மை. அதுவே அவர்களின் பலத்தின் மற்றுமொரு வடிவம்.

அனைத்துலக கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் (Lloyd's List) தகவல்களின் படி விடுதலைப் புலிகளிடம் 12 - 15 கப்பல்கள் உள்ளதாகவும் அவை Panama, Honduras and Liberia போன்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவல். ஆனால் அவர்களால் அடிக்கடி கப்பல்களையும், பதிவு செய்யப்பட்ட நாடுகளையும், முகவர்களையும் மாற்ற முடியும்.

எனினும் அந்த கப்பல்களுடனான புலிகளின் தொடர்புகள் நீரூபிக்கப்பட முடியாதவை. இந்த கப்பல்கள் சட்டபூர்வமான நிறுவனங்களின் ஊடாகவே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு. தமது வர்த்தக நடவடிக்கைகளின் நடுவே சில சமயங்களில் ஆயுதத் தளபாடங்களை விடுதலைப் புலிகளுக்கு இந்த கப்பல்கள் வழங்குவதாகவும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்து வருகின்றது. மேலும் புலிகளால் உலகில் உள்ள நூற்றுக்கணக்கான கப்பல் நிறுவனங்களிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு அமர்த்தவும் முடியும்.

ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல்கள் சிறிலங்கா அரசு கூறுவது போன்று மக்கள் காரியாலயங்களுக்கு செல்வது போல காலை வேளைகளிலோ அல்லது மாலை வேளைகளிலோ சிறிலங்காவின் கடற்பரப்பினுள் பிரவேசிப்பது இல்லை. பொதுவாக கூறப்போனால் பகல் வேளைகளில் பொருட்களுடன் வரும் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பை அண்மிப்பது இல்லை.

சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள கண்காணிப்புக் கப்பல்களின் பலம், ரடார்களின் தூர வீச்சுக்கள், வேவு விமானங்களின் வலிமை, அந்நிய நாடுகளின் புலனாய்வு உதவிகள் என்பன புலிகளுக்கு தெரிந்த விடயங்கள்.

கப்பல் மீண்டும் பயன்படுத்த தேவை எனில் அது அனைத்துலக கடற்பரப்பில் தான் பயணிக்கும். நள்ளிரவு வேளைகளில் புலிகளின் தளப்பகுதியை அண்மித்து சரக்குகளை இறக்கிவிட்டு பின்னர் பொழுது புலரும் போது மீண்டும் அனைத்துலக கடற்பரப்பை அடைந்துவிடும்.

அதிலும் குறிப்பாக அவை கரைப்பகுதிக்கு மிக அண்மையாக வருவதில்லை. ஆழ்கடல் பகுதியில் வைத்து கடற்புலிகளின் படகுகளில் தான் அதிக சரக்குகள் இறக்கப்படுவதுண்டு. இப்படியான சந்தர்ப்பங்களில் கடற்புலிகளின் பாதுகாப்பு வியூகங்கள் மிகவும் பலமானதாக இருக்கும். கப்பலை அண்மிக்கும் கடற்படைப் படகுகள் கடுமையான மோதல்களை சந்திக்க வேண்டியிருக்கும். முன்னர் புலிகளின் சில கப்பல்கள் தாக்கப்பட்ட போது கடற்படையினரும் இழப்புக்களை சந்தித்திருந்தனர்.

1996 ஆம் ஆண்டு முல்லைக் கடற்பரப்பில் நகர்ந்து கொண்டிருந்த புலிகளின் கப்பலை தாக்கி அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைப் கப்பல்கள் ஈடுபட்டதும் அந்த தாக்குதலில் இந்திய மற்றும் சிறிலங்கா படகுகள் சேதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்கள் கொண்டு வரப்படும் கப்பல்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு தேவைப்படாத சந்தர்ப்பங்களில், கப்பல் இரவோடு இரவாக புலிகளின் முக்கிய தளப்பகுதியின் கடற்கரையை அடைந்து தரைதட்டி விடும். அங்கு ஆயத்த நிலையில் இருக்கும் போராளிகளும் மக்களும் பொழுது புலர்வதற்கு முன்னர் கப்பலை வெறுமையாக்கி விடுவார்கள். 1997 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் தரைதட்டி நின்ற கப்பலை சிறிலங்காவின் விமானப்படை பல நாட்களின் பின்னர் தாக்கி அழித்துவிட்டு புகைப்படங்களை வெளியிட்டது உங்களுக்கு நினைவு இருக்லாம். அப்போது சிறிலங்கா அரசு கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்குவதற்கு முன்னர் அதனை தகர்த்துவிட்டதாக கூறியிருந்தது.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை இருபது வருடங்களாக ஒரே உத்தியை கையாள்வது கிடையாது. அவர்கள் தமக்கு தேவையான ஆயுதங்களை தருவிப்பதில் பயன்படுத்தும் உத்திகளை அடிக்கடி மாற்றியபடியே இருப்பார்கள். மேலும் சமரை ஆரம்பித்து விட்டு ஆயுதம் வாங்க அவர்கள் திரிவதில்லை என்பதுடன் களத்தில் ஓய்வாக இருக்கும் போது படுத்து உறங்குவதும் இல்லை.

விடுதலைப் போரில் ஓய்வுகள் என்பது கிடைப்பதில்லை அது போராளிகளானாலும் சரி, போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்களானாலும் சரி அதனால் தான் அதில் தோல்விகளும் அரிது.

மேலும் தமது ஒரு கப்பல் தாக்கப்பட்டால் மற்றய கப்பலின் வரவிலும், பொருட்களின் தரையிறக்கத்திலும் அதிக கவனங்கள் வெலுத்தப்படுவதுடன். அதற்கான சூழ்நிலைகளும் சரியாக கணிப்பிடப்படுவதுண்டு.

சிறிலங்கா அரசைப் பொறுத்தவரை களமுனைப் போரை விட பிரச்சாரப் போரையே அது தற்போது முதன்மைப்படுத்தி வருகின்றது. மகிந்தவின் வாகரைப்பயணம், கிபீரில் நின்று நேர்காணல் வழங்கியது, டோராவில் ஏறி திருமகோணமலையை வலம் வந்தது என்பன இதற்கு மிகச்சில உதாரணங்கள் (எதிர்வரும் காலங்களில் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆயுதக்கப்பல் என்று கூறி ஒரு கப்பலில் நின்று மகிந்த புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை).

களமுனைகளில் தொய்வு ஏற்படும் போதோ அல்லது அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திருப்ப வேண்டிய சந்தர்ப்பங்களிலோ அரசு இவ்வாறான கடல் நாடகங்களை அரங்கேற்றுவதுண்டு.

உதாரணமாக காலியில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டிற்கு முன்னர் கொழும்பு துறைமுகம் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை அரசு அரங்கேற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இறுதியில் அதன் உண்மைத் தன்மையை நீர்கொழும்பு மீனவர்கள் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர். ஆனால் கப்பல்களின் கதைகளை சொல்வதற்கு ஆட்கள் இல்லை என்பது தான் அரசிற்கு உள்ள அனுகூலம்.

விடுதலைப் புலிகளின் எந்தக் கப்பல்களும் இதுவரையான காலத்தில் அழிக்கப்படவில்லை என்பது இதன் கருத்தல்ல. சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படையினரின் தாக்குதல்களால் ஏறத்தாழ 5 கப்பல்களை புலிகள் முன்னர் இழந்துள்ளனர். ஆனால் ஆறு மாதத்தில் ஆறு கப்பல்கள் என்ற அரசின் கணக்கு தான் மிகவும் தவறானது. அதிலும் ஓரே இடத்தில் வைத்து ஒரே நாளில் இரு கப்பல்களை அழித்தது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரமாகும்.

அரசின் இந்த பிரச்சாரங்களில் உள்ள வலிமையற்ற ஆதாரங்களாக பின்வருவனவற்றை கொள்ளலாம்.

- எல்லா கப்பல்களும் பகல் வேளைகளில் அழிக்கப்பட்டன.

- பட்டப்பகலில் புலிகளின் கப்பல்கள் எல்லாம் சிறிலங்காவின் கடற்பரப்பில் சுற்றித்திரிந்தது.

- புலிகளின் தளப்பகுதிகளுடன் தொடர்பில்லாத கடற்பிரதேசங்களில் பொரும்பாலான கப்பல்களை சிறிலங்கா அரசு அழித்தாக கூறுவது.

- காலியில் அழிக்கப்பட்ட கப்பல் வெடித்துச் சிதறி எரிந்த பின்னரும் ஆட்டிலறி எறிகணைகள் வெடிக்காது மிதந்து வந்ததாக கடற்படைத்தளபதி கூறியது.

- தமது கூற்றுக்களுக்கு வலுச்சேர்க்கும் ஆர்வத்தில் தமக்கு புலனாய்வுத் தகவல்களை தந்தவர்கள் என சில நாடுகளின் பெயர்களை கூறியது.

- எல்லா கப்பல்களும் கடற்படையினர் மீது கனரக ஆயுதங்களினால் தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது.

இந்த கருத்துக்கள் தான் சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களில் உள்ள மிகவும் பலவீனமான அம்சங்கள். எனினும் அரசின் இந்த நாடகங்களுக்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?

- தாம் மிகவும் உசார் நிலையில் இருப்பது போலவும் தமக்கு அனைத்துலக புலனாய்வு அமைப்புக்களிடம் இருந்து ஒத்துழைப்புக்கள் கிடைப்பது போலவும் காண்பித்து புலிகளின் ஆயுதக்கப்பலின் வரவுகளை முன்கூட்டியே தடுக்கும் முயற்சி

- அனைத்துலகத்தில் புலிகளின் கப்பல்துறை வலையமைப்பு தொடர்பாக ஒரு பெரும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அவர்களை அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் முடக்கும் தந்திரம்.

- கடலில் தமது ஆதிக்கம் இழக்கப்படவில்லை என்றும், நடந்துவரும் போரில் புலிகள் அழிந்து போகிறார்கள் என்ற தமது வாதத்திற்கு வலுச்சேர்க்கவும் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம்.

என்பன தான் அரசின் நாடகங்களுக்கான காரணங்களாக கொள்ளப்படலாம். எனினும் இந்த நாடகத்தில் அழிந்து போகும் கப்பல்கள் எவை என்பதும் முக்கிய விடையம்.

- மீனவர்களின் சிறு படகுகளோ அல்லது றோலர்களோ கப்பல்களாக கணணியின் உதவியுடன் காண்பிக்கப்படலாம்.

- ஆட்களை கடத்தும் அல்லது சட்டரீதியற்ற வர்த்தகங்களில் ஈடுபடும் அல்லது போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் கப்பல்களவோ, றோலர்களாகவே இவை இருக்காலம்.

- சிறிலங்கா படைகளின் கற்பனைக் கப்பல்களாகவும் அவை இருக்காலம்.

இவை தான் இந்த நாடகத்தின் சுருக்கம்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் கருத்துக்களையோ அல்லது மறுப்பு அறிக்கைகளையோ தெரிவிப்பதில்லை என்பதும் எங்களில் ஒரு சிலரின் ஆதங்கம். ஆனால் தென்னிலங்கையில் மாடு களவு போனாலோ அல்லது அமெரிக்காவில் கணணி ஒன்று பழுதடைந்து விட்டாலோ விடுதலைப் புலிகள் தான் அதற்கு காரணம் என தம்நிலை அறியாது கூறுவது சிறிலங்கா அரசினதும் அதன் பேச்சாளர்களினதும் தொன்று தொட்ட வழக்கம்.

எனவே அவர்களின் இத்தகைய பெறுமதியற்ற கூற்றுக்களுக்கு எல்லாம் பதிலளிப்பதற்கு புலிகளுக்கு நேரம் இருப்பதில்லை. அரச தரப்பினரை போல வெட்டியாக பேசுவதற்கு அவர்களுக்கு ஓய்வுகளும் கிடைப்பதில்லை. மேலும் சிங்கள அரசுகள் தமது சொந்த மக்களையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்ற முனையும் இந்த நடவடிக்கைகளை அவர்கள் தான் தமது பகுத்தறிவின் மூலம் இனங்காண வேண்டுமே தவிர தமிழ் மக்களல்ல.

அரசின் இந்த பொய்யான பிரச்சாரங்களால் விடுதலைப்பலிகளுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இருக்கப்போவதில்லை. மாறாக சிங்களப்படைகளுக்கு தான் அதிக பாதிப்புக்கள் ஏற்படுவதாக தென்னிலங்கை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் தமது சொந்த பிரச்சாரங்களை தாமே நம்பும் பழக்கம் கொண்டவர்கள் சிங்களப்படைகள். அதனால் தான் இராணுவத்தின் கண்களுக்கு புலிகள் சிலசமயம் சிறு குன்றுகள் போலவும் பலசமயம் பெரும் மலைகள் போலவும் பிரமிப்பூட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுதியவர்: அருஸ் (வேல்ஸ்)

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

Saturday, March 03, 2007

சிறிலங்காவின் பிரச்சாரப்போரில் வீழ்ந்த எறிகணை

சிறிலங்கா அரசின் பிரச்சாரப்போரின் மீது வீழ்ந்த எறிகணைகள்
-அருஸ் (வேல்ஸ்)-

சிறிலங்கா அரசின் வாகரை ஆக்கிரமிப்பின் பின்னர் கிழக்கில் நிலவிவரும் இராணுவச் சமவலுச் சமன்பாடுகளில் சர்வதேசம் கொண்டிருந்த குழப்பநிலை கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பின் இதயப்பகுதியில் நடைபெற்ற மோட்டார் தாக்குதலுடன் மேலும் குழப்பமடைந்துள்ளது.

அரசின் அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் உற்சாகம் அடைந்த மகிந்தாவின் சகோதரரும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச விடுதலைப் புலிகளை முற்றாக கிழக்கில் இருந்து வெளியேற்றப் போவதாக சூளுரைத்திருந்தார். அவரின் கூற்றின் அறியாத்தன்மையை அனைத்துலக சமூகம் தெளிவாக புரிந்து கொண்ட நாளாக கடந்த 27.02.2007 ஆம் நாள் அமைந்து விட்டது.

தனது இராணுவ மேலான்மைக் கனவினால் முற்றாக முறிந்து போகாத போர் நிறுத்தத்தையும் அதன் நடைமுறைகளையும் உதாசீனம் செய்த அரசு தனது பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைத்துலக இராஜதந்திரிகளை மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றது.

இந்த தூதுவர்களின் பயணத்தின் மூலம் தனது இராணுவ மேலாண்மையை மேலும் மெருகூட்ட முடியும் என்பது அரசின் கணக்கு. மேலும் போரில் வெற்றியீட்டும் தரப்பு மறுதரப்பை மதிப்பது இல்லை என்பதும் வரலாறு. எனவே கிழக்கில் நடைபெற்ற மோதல்களில் தான் வெற்றியீட்டியதாக எண்ணிய அரசு விடுதலைப் புலிகளை உதாசீனம் செய்ததுடன் இராஜதந்திரிகளின் பயணத்தையும் அறிவிக்காது விட்டிருந்தது.

சமாதானத்தின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியபடி இலங்கையின் இனப்போருக்கு மறைமுக ஆதரவை வழங்கிவந்த மேற்குலகமும் சிறிலங்கா அரசின் பொய்ப்பிரச்சாரத்தில் மூழ்கி தமது பாதுகாப்பைக் கோட்டை விட்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பு அதனை பாதுகாக்க தேவையான படைப்பலம் என்பன தொடர்பாக கூடிய விளக்கங்கள் இருந்திருந்தால் இராஜதந்திரிகள் இந்த அனர்த்தத்தை தவிர்த்திருக்க முடியும்.

கடந்த செவ்வாய்கிழமை (27.02.07) காலை பெல்-212 மற்றும் எம்.ஐ-17 ஆகிய இரு உலங்குவானூர்திகளிலும், ஒரு தனியாருக்கு சொந்தமான சிறிய விமானத்திலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சிறிலங்காவின் பேரனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைக் கொண்ட 34 பேர் அடங்கிய குழு மட்டக்களப்பிற்கு பயணமானது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண மற்றும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதும் அங்குள்ள அரச மற்றும் தொண்டர் அமைப்பு பிரதிநிதிகளை சந்திப்பதும் தான் அவர்களது நோக்கம். முதலில் விமானம் விமானப்படைத் தளத்தில் இறங்கியபோது தளத்தின் மேற்குப்புறமுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுணதீவில் இருந்து ஏவப்பட்ட 120 மி.மீ எறிகணைகள் விமான ஓடுபாதையில் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.

விமானம் சிறிய சேதத்துடன் தரையிறங்கிய போதும் உலங்குவானூர்திகள் விமானப்படைத் தளத்தில் இருந்து இரு கி.மீ தொலைவில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தனத்தை நோக்கி திருப்பிவிடப்பட்டன. இந்த மைதானத்தில் இருந்த இராணுவத்தினர் வாகரை படை நடவடிக்கைக்கு நகர்த்தப்பட்டதுடன் தற்போது வெபர் மைதானம் விசேட அதிரடிப்படையினா¢ன் கட்டுப்பாட்டில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் முதலாவது உலங்குவானூர்தி தரை இறங்கிய சற்று நேரத்தில் மட்டக்களப்பின் வாவியின் மறுபுறமுள்ள வவுணதீவுப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 120 மி.மீ மோட்டார் எறிகணைகள் அங்கும் சரமாரியாக வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.

எறிகணைகள் விழத் தொடங்கியதும் உலங்குவானூர்தியில் இருந்து இறங்கியவர்களை விட்டுவிட்டு மிகுதிப்பேருடன் அவசர அவசரமாக மேலெழுந்த உலங்குவானனூர்தி அம்பாறை நோக்கி வேகமாக சென்றுவிட்டது.

தரையிறங்கிய தூதுவர்கள் பதற்றத்தல் சிதறி ஓடியதுடன் நிலத்தில் விழுந்து படுத்தும் தமது உயிரை காப்பாற்றிக்கொண்டனர். ஆனால் அதிர்ஸ்டவசமாக உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. ஐ.நா அதிகாரிகள் உடனடியாக விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்துடன் தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்தியதே அவர்களின் உயிர்களை காப்பாற்றியிருந்தது. எனினும் ஜேர்மன் மற்றும் இத்தாலிய நாட்டுத் தூதுவர்கள் சிறுகாயமடைந்ததுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சிறு சேதமடைந்தது.

கிழக்கு தொடர்பாக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களை எல்லாம் தூக்கி வீசுமளவிற்கு அமைந்து விட்டது இந்த தாக்குதல். அனைத்துலக ஊடகங்கள் எல்லாம் மட்டக்களப்பு தாக்குதலை தமது செய்தி அறிக்கைகளில் முதன்மைப்படுத்தியிருந்தன.

கிழக்கில் காடுகளுக்குள் ஓடி ஒளிந்த புலிகளை தேடி இரண்டாவது கட்ட இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகப் போகின்றது என இராணுவத் தளபதி அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில் மட்டக்களப்பின் இதயப்பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சிறிலங்கா அரசை மட்டுமல்ல அதற்கு அதரவை தரும் சர்வதேச சமூகத்திற்கும் ஆச்சரியமாகத் தான் இருந்திருக்கும்.

இந்த தாக்குதலுக்கு புலிகள் நீண்ட தூர ஆட்டிலறிகளை பயன்படுத்தவில்லை ஏறத்தாழ 6 கி.மீ தூரவீச்சுக் கொண்ட 120 மி.மீ மோட்டார்களை தான் பயன்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு நகரின் வாவியின் மறுபக்கம் உள்ள வவுணதீவுப் பகுதியில் இருந்து பல மோட்டர்கள் மூலம் ஒரே சமயத்தில் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்பட்டுகின்றது.

எனினும் புலிகளின் பகுதியில் இருந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதா அல்லது தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து முன்னகர்ந்த விடுதலைப் புலிகளின் விசேட படையணி இந்த தாக்குதலை நடத்தியதா என்பது சிறிலங்காவின் பாதுகாப்பு படையினருக்கு புரியாத புதிராகவே உள்ளது. மோட்டார்கள் ஆட்டிலறிகளை போல் அல்லாது இலகுவாக நகர்த்தப்படக் கூடியவையாக இருப்பதால் உலகில் உள்ள இராணுவங்களின் விசேட படையணிகள் அவற்றை தமது விசேட படை நடவடிக்கைக்கு பயன்படுத்துவதுண்டு.

விடுதலைப் புலிகளும் முன்னைய காலங்களில்; 81 மி.மீ மோட்டார்களை தமது விசேட படை நடவடிக்கைகளுக்கு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு சென்று பயன்படுத்தியதுண்டு.

அதாவது சிங்கள அரசின் ஒட்டுமொத்த பிரச்சாரங்களையும் முறியடிக்கும் வல்லமை புலிகளின் தாக்குதல்களுக்கு உண்டு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

அனைத்துலக இராஜதந்திரிகளைப் பொறுத்த வரையில் தாக்குதலின் பின்னர் காரசாரமான அறிக்கைகளை வெளியிட விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் மீது தவறுகள் உள்ளதாகவே அவர்கள் உணர்கிறார்கள். இது சிங்கள இனவாதிகளுக்கு கடும் சீற்றத்தை கொடுத்திருப்பதும் உண்மையே.

ஆனால் சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்தம் ஒரு சர்வதேச அங்கீகாரத்துடன், சர்வதேச மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. அந்த போர்நிறுத்த உடன்பாட்டை சிங்கள அரசு மதிக்குதோ இல்லையோ சர்வதேச சமூகம் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

அதாவது மோதல்கள் நடைபெறும் பிரதேசங்களுக்கு பயணிக்கும் போது கண்காணிப்புக் குழுவினூடாக விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்க வேண்டிய கடமையில் இருந்து சிங்கள அரசு மட்டுமல்ல சர்வதேசத்தின் தூதுவர்களும் தவறிவிட்டதாகவே கொள்ளமுடியும்.

இதை மறுவடிவில் கூறுவதானால் கிழக்கு மாகாணத்தில் போர்நிறுத்தம் ஒன்று நடைமுறையில்; இல்லை என்பதை அனைத்துலக சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவே கொள்ள முடியும்.

அப்படி ஒரு நிலைப்பாட்டையே சர்வதேச சமூகம் எடுத்திருக்குமானால், கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதற்கு அவர்கள் மறைமுகமாக ஆதரவை கொடுத்தவர்களாகவே கொள்ள முடியும். இதன் மூலம் சர்வதேச நாடுகள் சிறிலங்காவில் உள்ள இராணுவச் சமவலுவை மாற்றியமைக்க முற்படுவதாகவே கருத முடியும்.

அதாவது

- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை குறைத்தல்.

- அரசின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.

- விடுதலைப் புலிகளுக்கான நிதி மற்றும் ஆயுத விநியோக மார்க்கங்களை தடுத்தல்.

- தமிழ் மக்களின் மனவலிமையை சிதைத்தல்.

- சிறிலங்கா படைகளை ஆயுத மற்றும் உளவியல் வழிகளில் பலப்படுத்ததல்.

போன்ற வழிகளின் மூலம் விடுதலைப் புலிகளின் பலத்தை குறைத்து, இராணுவச் சமநிலையை மாற்றி அமைத்து விடலாம் என்பது சர்வதேசத்தின் கனவாகக்கூட இருக்கலாம்.

உதட்டளவில் சமாதான வழிகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என கோசம் போடும் சர்வதேச சமூகம். செயலளவில் சிங்கள தேசத்தின் தாளத்திற்கு ஆடுவது ஏன்? பொஸ்னியாவில் 51:49 என்ற இராணுவச் சமநிலை கூட நியாயமான அரசியல் தீ¡வை தரமாட்டாது என கருதி அந்த சமநிலையை 50:50 ஆக மாற்ற முனைந்த மேற்குலகம் விடுதலைப் புலிகளின் பலத்தை குறைக்க சிங்கள அரசுக்கு ஆதரவு வழங்குவதேன்?

வாகரையில் மோதல்கள் நடைபெறும் போது பாராமுகமாக இருந்த சர்வதேசம் தற்போது இடம்பெயாந்த மக்களுக்கு நன்மை செய்ய தமது உயிரையும் துச்சமென மதித்து ஆவலாக பறப்பது ஏன்?

அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் இராஜதந்தரிகள் சிக்கியது சர்வதேசத்தின் மறுமுகத்தை வெளிக்காட்டியுள்ள நிகழ்வுகளில் ஒன்று என்பது தான் உண்மை. அதனால் தான் அவர்களும் பேசாமடந்தையாகியுள்ளனர்.

ஆனால் சிறிலங்கா அரசுகளை பொறுத்த வரைக்கும். 1970 களில் புலிகள் தோற்றம் பெற்றதில் இருந்து இன்றுவரை புலிகளை வடக்கில் இருந்து வெளியேற்றுகிறோம், கிழக்கில் இருந்து வெளியேற்றுகிறோம் என அவ்வப்போது தெரிவித்து வருவதுண்டு. ஆனால் அவர்களால் வெளியேற்ற முடிந்ததோ இல்லையோ புலியணிகள் சிறிலங்காவின் தலைநகர் வரை ஊடுருவி வளர்ந்தது தான் உண்மை.

இதற்கான காரணம் விடுதலைப் புலிகள் இரண்டு பரிமாணங்களை கொண்டிருப்பது தான். ஒன்று விசேட நடவடிக்கை படையணிகள், இரண்டாவது மரபுவழிப் படையணிகள். இந்த இரு பரிணாமங்களும் களத்தின் நிலைமைக்கு ஏற்ப மாற்றமடையும் என்பதுடன் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தவையாகவும் உள்ளன.

இதனால் தான் இன்றுவரை விடுதலைப் புலிகளை வெளியேற்றுகிறோம் என மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் அரச படைகளே புதைந்துபோய் உள்ளனர். இதற்கு சிறந்த உதாரணமாக யாழ். குடாநாடு மீதான படை நடவடிக்கையை கூறலாம். யாழில் இருந்து புலிகளை வெளியேற்றிவிட்டால் சொற்ப படையினரை அங்கு நிறுத்திவிட்டு தொடர்ந்து படை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அரசு எண்ணியிருந்தது.

ஆனால் இன்றுவரை புலிகளின் விசேட அணிகளை அவர்களால் அங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை என்பதுடன் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப்பகுதிகள், யாழ். நகர் என்பவற்றில் கிளைமோர்கள் வெடித்தபடி தான் உள்ளன. ஆக்கிரமித்த 40,000 படைகளை விட அதிக படையினரை தரும்படி யாழ். இராணுவத்தரப்பு அரசிடம் கோரியும் வருகின்றது. அதாவது சென்ற படையினரை யாழில் இருந்து மட்டுமல்ல கிழக்கில் இருந்தும் மீளமுடியாத பொறிக்குள் சிக்க வைக்கும் வல்லமை புலிகளிடம் உண்டு.

மேலும் வவுனியா, கிழக்கு மாகாணம், கொழும்பு, கண்டி என இரணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களும் அதிகரித்து செல்கின்றன. அதாவது கட்டுப்பாட்டுப் பகுதி, கட்டுப்பாடற்ற பகுதி என்ற சொற்பதங்களுக்கு அப்பால் சில தாக்குதல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. உதாரணமாக கட்டுநாயக்க தாக்குதலுக்கோ அல்லது கொலன்னாவை தாக்குதலுக்கோ வலுவான தளப்பகுதி தாக்குதல்கள் நடைபெற்ற பகுதிக்கு அண்மையில் இருக்கவில்லை. ஆனால் அந்த தாக்குதல்கள் எற்படுத்திய தாக்கங்கள் அதிகம்.

அதேபோலவே மட்டு. நகரில் நிகழ்ந்த இந்த தாக்குதல் அரசின் பிரச்சார போருக்கும், சர்வதேசத்தின் இரட்டை வேடத்திற்கும் வீழ்ந்த பலத்த பின்னடைவாகும் என்பதுடன் ஏவப்பட்ட 120 மி.மீ எறிகணைகள் போர்க்களத்தில் ஏற்படுத்திய சேதங்களை விட அரசின் பிரச்சாரக் களத்தில் ஏற்படுத்திய சேதங்கள் தான் அதிகம்.

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

Friday, January 26, 2007

வாகரையில் தவறாகிப்போன மதிப்பீடும் இலக்கும்

வாகரைப் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமையானது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டனரா?- விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இராணுவச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்ற கேள்விகளைப் பலர் கேட்கக் காரணமாகியுள்ளது.

வாகரைப் பிரதேசத்தின் முக்கியத்துவம், கிழக்கில் ஒரு பிரதேசத்தின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் இழந்துள்ளமை போன்ற விடயங்களே இக்கேள்விகள் எழுவதற்கான முக்கியமான காரணியாகும். மேல் சொன்ன காரணங்களின் அடிப்படையில் பார்க்கப் போனால், வாகரைப் பிரதேசத்தை விட்டு விடுதலைப் புலிகள் வெளியேறியமை புலிகளுக்குப் பின்னடைவு அல்ல எனக் கூறிவிட முடியாது.

ஏனெனில் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பிரதேசம் கைமாறிப் போவது என்பதும், கிழக்கிற்கான தொடர்பாக, அதாவது மட்டக்களப்பிற்கான கடல்வழித் தொடர்பிற்கான மார்க்கமாக இருந்த ஒரு பகுதி இல்லாது போயுள்ளமை என்பது சிறிதளவேனும் பின்னடைவாகவே பார்க்கப்படும். ஆகையினால் இப்பிரதேசத்திற்காக விடுதலைப் புலிகள் தொடர்ந்து போரிட்டிருத்தல் வேண்டுமா? அவ்வாறு போரிடுதல் எந்தளவிற்கு இராணுவ ரீதியில் ஏற்புடையதாக இருக்க முடியும்? என்பவை இங்கு எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாகும்.

வாகரைப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத்தினருக்குச் சுமார் நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. வேறுவிதமாகக் கூறுவதானால், ஜயசிக்குறு நடவடிக்கையின் போது இராணுவம் விட்டுச்சென்ற பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கென நான்கு மாதங்கள் போரிட வேண்டியதாகியது.

அது மட்டுமன்றி நூற்றுக்கு மேற்பட்ட படையினரை இழக்க வேண்டியதாகவும், நூற்றுக்கணக்கான படையினர் காயமடைய வேண்டியதுமானதொரு நிலையும் இராணுவத்தரப்பிற்கு ஏற்பட்டிருந்தது. அதாவது கைவிட்டுச் சென்ற பிரதேசம் ஒன்றை மீளக் கைப்பற்றுவதற்காகச் சிறிலங்கா இராணுவம் எதிர்பார்த்ததற்கும் மேலாக விலை கொடுக்க வேண்டியதாக இருந்தது.

யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் இருதரப்பினரதும் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்ற ரீதியில் வடக்கிலும் கிழக்கிலும் பிரதேசங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவே ஒழிய, வடக்கில் வரையறை செய்யபட்டது போன்று கிழக்கில் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் வரையறை செய்யப்பட்டதாக இல்லை.

இதனால் யுத்த நிறுத்த காலத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டதும் உண்டு. அதாவது சிறிலங்கா ஆயுதப்படையினர் சில வேளைகளில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை எனக் கூறியதும் உண்டு. அதேபோன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுப் பகுதி என்றும் கூறியதுண்டு.

தற்பொழுது வாகரையை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பினும், அதன் கட்டுப்பாட்டை இராணுவம் எந்தளவிற்குக் கொண்டிருக்கப் போகின்றது· கொண்டிருக்க முடியும் என்பதைப் பொறுத்தே வாகரையை ஆக்கிரமித்தமை பொருத்தமானதொரு இராணுவ நடவடிக்கைதானா? என்ற முடிவிற்கு வரமுடியும்.

இனி வாகரை தொடர்பான நடவடிக்கைகளுக்கு வருவோம். வாகரையைக் கைப்பற்றுதல் என்ற சிறிலங்கா அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் இராணுவம் செயற்படத் தொடங்கியதும் அதற்குப் பல வழிகள் கைக்கொள்ளப்பட்டன. இதில் முக்கியமானது அப்பிரதேசத்தில் பெரும் மனித அவலத்தைத் தோற்றுவித்து அப்பிரதேசத்தில் இருந்து மக்களை வெளியேற்றுதல் என்பது இதற்கென அரச தரப்பு இரண்டு வழிமுறைகளைக் கைக்கொண்டது.

1. உணவுப் பொருள், மருந்துப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள், சேவைகள் என்பனவற்றை முற்றாக முடக்குதல்.

2. பா¡¢ய இன அழிப்பு நடவடிக்கையாக விமான மற்றும் தொடர் எறிகணை வீச்சுக்களை மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்துதல்.

ஒக்ரோபர் மாதத்தின் ஆரம்பத்தில் வாகரையைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவம் நடவடிக்கைகளைத் தொடங்கியதும் வாகரைப் பிரதேசத்திற்கான தரை வழிப்பாதையான ஏ-15 பாதையை மூடியது இதன்மூலம் மக்களின் போக்குவரத்து உட்பட அப்பிரதேசத்திற்கான அனைத்து விநியோகங்களும் முடக்கப்பட்டன.

ஒக்ரோபாரின் ஆரம்பத்தில் மேற்கொண்ட முற்றுகையை அடுத்து நவம்பர் மாத இறுதிப் பகுதியில் ஒரு தடவை மட்டும் மிகக் குறைந்த அளவிலான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அவையும் சர்வதேச நிவாரண அமைப்புக்களின் பெரும் முயற்சிகளிலேயே சாத்தியமாகியது.

அதன் பின்னர் இராணுவம் வாகரைப் பிரதேசத்திற்குள் நுழையும் வரை அதாவது ஆக்கிரமிக்கப்படும் வரை அத்தியாவசியத் தேவைப் பணிகள் முடக்கப்பட்டவையாகவே இருந்தன. சிறிலங்கா அரசு மக்களின் அத்தியாவசிய தேவைகளை யுத்தத்தின் ஒரு கருவியாக்கிக் கொண்டது.

அடுத்ததாக, வாகரைப்பிரதேசத்தின் மீது சிறிலங்கா இராணுவமும், விமானப்படையும் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலினால் பெரும் மனித அவலமே தோற்றுவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு, பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் மருத்துவ வசதி கிட்டாததால் மரணமடைந்தனர்.

இதேசமயம் வாகரை வைத்தியசாலைப் பகுதியைத் தாக்குதலற்ற சூனியப்பிரதேசமாக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக வாகரை வைத்தியசாலையும் அதன் வளாகப் பகுதியும் தாக்குதலுக்கு உள்ளானதில் பலர் காயமடைய வேண்டியதாயிற்று.

அதாவது பெரும் மனித அவலத்தைத் தோற்றுவித்து மக்களை வெளியேற்றுதல் என்பது அரசின் உறுதியான கொள்கையாக இருந்தது. இதன் வழிமுறையாக ஒருபுறத்தில் பட்டினி போட்டு மக்களைக் கொல்லுதல் மற்றொரு புறத்தில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் மக்களை அழித்தொழித்தல் என்பதாக இருந்தது.

இந்நிலையில் வாகரை வைத்தியசாலைப் பகுதி மீதும் சிறிலங்கா இராணுவம் தாக்குதல் தொடர்வதற்குத் தீர்மானம் மேற்கொண்டமை உணரப்பட்டதையடுத்து, வாகரையில் இருந்து வெளியேறுதல் என்பது தவிர்க்கப்படமுடியாத தொன்றாகியது. அதாவது சிறிலங்கா அரசு இராணுவ ரீதியில் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தவும், இனப்படுகொலை புரியவும் தயாராகிவிட்ட நிலையில் வாகரையில் இருந்து வெளியேறுதல் என்பது மக்களைக் காக்கும் நடவடிக்கையில் ஒன்றாகியது. அதாவது பெரும் இன அழிவில் இருந்து மக்களைக் காப்பதென்பதும் விடுதலைப் புலிகளின் கடமையாகியது.

இந்த வகையில் வாகரைப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க சிறிலங்கா அரசும், அதன் இராணுவமும் கூட்டாக மேற்கொண்ட இவ் வழிமுறை சர்வதேச விதிகளுக்கு மாறானதாகும். அத்தோடு வாகரைப் பிரதேசத்தின் மீதான சிறிலங்கா அரசின் நடவடிக்கையானது சிறிலங்கா அரசு தனது இராணுவ ரீதியிலான இலக்கை நிறைவேற்றிக் கொள்ள எத்தகைய மனித அவலத்தையும் இன அழிப்பு நடவடிக்கைக்கும் தயாராகவுள்ளது என்பதை சர்வதேச சமூகம் பூ¢ந்து கொள்ளவும் விளங்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் கொடுத்துள்ளது எனின் மிகையாகாது.

இதேசமயம் இத்தகைய வழிமுறையும், நடவடிக்கைகளும் வாகரையை ஆக்கிரமிக்க அவர்களுக்கு உதவியதாக இருப்பினும் இராணுவ ரீதியில் சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடு, சரியானதா? இலக்குகள் எட்டப்பட்டனவா? என்பவையே வாகரை ஆக்கிரமிப்பின் பயனைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

வாகரை குறித்து சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடென்பது கிழக்கில் விடுதலைப் புலிகள் குறித்த மதிப்பீட்டின் ஒரு பகுதியாகவே கொள்ளத்தக்கதாகும். அவ்வாறானால் இம்மதிப்பீடு சரியானதா? என்பதே இன்றுள்ள கேள்வியாகும். அதாவது இராணுவத்தின் மதிப்பீட்டின்படி வாகரை நடவடிக்கை முற்றுப்பெற்றதா? என்பதே ஆகும்.

வாகரை குறித்த- அதாவது கிழக்குக் குறித்த சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடானது ஒட்டுக்குழுவான கருணா குழுவையும் ஒரு அங்கமாக இணைத்துக்கொண்டதாகவே இருந்தது. அதாவது இவ் ஒட்டுக்குழுவின் வெளியேற்றத்தால் இராணுவம் பெற்றுக்கொண்ட அனுகூலம் இவ் ஒட்டுக்குழு இராணுவ நடவடிக்கையின் போது ஆற்றக்கூடிய பங்களிப்பு என்பனவற்றுடன் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது.

இதன் பிரகாரம் வாகரைப் பிரதேச ஆக்கிரமிப்பில் இவ் ஒட்டுக்குழுவையும் இணைத்தே சிறிலங்கா இராணுவத்தரப்பு முதலில் திட்டமிட்டது. இதன் பிரகாரம் ஒக்ரோபர் ஆரம்பத்தில் (06.10.06) மேற்கொண்ட ஆரம்பகட்ட நடவடிக்கையில் ஒட்டுக்குழுவும் இராணுவத்துடன் சேர்ந்து களத்தில் இறங்கியது. ஆனால், விடுதலைப் புலிகள் கொடுத்த பதிலடியில் இராணுவத்திலும், ஒட்டுக்குழுவிலுமாக 30 இற்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதன் மூலம் சிறிலங்கா இராணுவத்திற்கு ஒட்டுக்குழு மீதான நம்பிக்கை அற்றுப்போனது. தமது மதிப்பீடு குறித்து மீள் பா¢சீலனை செய்யவேண்டியதாயிற்று.

அடுத்ததாக வாகரையைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட பல முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் அதிகாரிகள் சிலரும் பலியாகியிருந்தனர். குறிப்பாக மாங்கேணி கட்டளை அதிகாரி உட்பட பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் சில சண்டைகளில் சடலங்களையும் விட்டு விட்டு இராணுவம் தப்பி ஓட வேண்டியதாயிற்று.

அதாவது வாகரையில் விடுதலைப் புலிகள்; குறித்த இராணுவத்தின் மதிப்பீடு தவறாகியது இத்தோல்விகளுக்குக் காரணம் தேட விளைந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வானிலை பாதகமாக இருந்ததாகவும் கடல் கொந்தளிப்பாக இருந்ததாகவும் இயற்கை மீது பழியைப் போட்டார்.

ஆனால் அப்பிரதேசத்தில் அக்காலப்பகுதியில் நிலவிய வானிலையும் கடற்கொந்தளிப்பும் பருவ காலத்திற்குரியவையே. அதாவது வழமைக்கு மாறான நிகழ்வாகவோ இடைக்கிடை ஏற்படும் வானிலை செயற்பாடாகவோ இருக்கவில்லை. ஆகையினால் இராணுவத் தளபதி தமது மதிப்பீட்டுத் தவறிற்கு பருவகால வானிலையைக் காரணமாகக் கூறியமை அவரின் தவறான மதிப்பீட்டிற்கான நொண்டிச்சாட்டே.

அடுத்ததாக சிறிலங்கா இராணுவம் பெரும் மனித அவலத்தைத் தோற்றுவிக்கத்தக்கதான பா¡¢ய தாக்குதல் திட்டத்துடன் வாகரையின் வடக்கிலும் தெற்கிலும் மும்முனைகளில் தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து மனிதப் பெரும் அவலத்தையும் தடுக்கும் நோக்கிலும், விடுதலைப் புலிகள் இழப்பின்றியும் வாகரையை விட்டு வெளியேறியமையானது சிறிலங்கா இராணுவத்தரப்பிற்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றமாகவே இருக்கமுடியும்.

சிறிலங்கா அரச தரப்பிற்கு ஆதரவான இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் உட்பட பல விமர்சகர்கள் விடுதலைப் புலிகள் தந்திரோபாயமாகப் பின் வாங்கிக்கொண்டனர் என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். அதாவது இராணுவம் விடுதலைப் புலிகளை முறியடித்தோ தோற்கடித்தோ வாகரைப் பிரதேசத்தைக் கைப்பற்றவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

எடுத்துக் காட்டாகக் கூறுவதானால் யாழ். குடாநாட்டின் மீது ¡¢விரச நடவடிக்கையை ஆரம்பித்தபோது எவ்வாறு புலிகள் நடந்து கொண்டார்களோ அவ்வாறே நடந்துகொண்டார்கள். சிறிலங்கா இராணுவத்தினர் மக்களும் விடுதலைப் புலிகளும் வெளியேறிய வாகரைக்குள்ளேயே புக முடிந்தது.

ஆனால் வாகரையை நோக்கிய படை நடவடிக்கை சிறிலங்காப் படைத்தரப்பு சில இலக்குகளைத் தெளிவாகவே கொண்டிருந்தது. அதில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலுவைக் குறைத்தல், அதாவது அழித்தல் முக்கியமானது. ஆனால் வாகரையில் அது நிறைவேறவில்லை.

இதேசமயம் வாகரைப் பிரதேசத்தின் மீதான படை நடவடிக்கைகளின் போது இடம்பெறும் எனச் சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை என்றே கூறலாம். அதாவது வாகரையின் முக்கியத்துவம் கருதி அதனைத் தக்க வைப்பதற்காக விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து பெரும் ஆளணியினரை வாகரைக்கு நகர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு இராணுவத் தரப்பிற்கு இருந்தது.

சிறிலங்கா அரசினதும் இராணுவத் தளபதியின் தற்போதைய திட்டமானது கிழக்கில் பெரும் களமுனைகளைத் திறத்தலின் மூலம் விடுதலைப் புலிகளை கிழக்கிற்கு இழுத்து பொருத்தமற்ற பெளதீக மற்றும் பண்பாட்டுச் சூழலில் யுத்தத்தை நடத்தி தோற்கடித்தல் ஆகும். இதன் மூலம் இராணுவச் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது அதன் எதிர்பார்க்கையாகும். ஆனால் சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தினதும் அன்றி சிறிலங்கா அரசினதும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விடுதலைப்புலிகள் செயற்படவில்லை. இதனால் சிறிலங்கா இராணுவத்தலைமையின் எதிர்பார்ப்பும் இந் நடவடிக்கை மூலம் நிறைவேறவில்லை.

சில இராணுவ ஆய்வாளர்களும் வேறு சிலரும் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறியதையும் வாகரையில் இருந்து வெளியேறியதையும் ஒப்பிட முடியுமா எனக் கேள்வி எழுப்பவும் கூடும். ஆனால் யுத்தத்தை எவரும் தமக்குச் சாதகமான சூழலில் நடத்துவதே வெற்றிதரக்கூடிய நடவடிக்கையாக அமையும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அத்தோடு இராணுவம் கிழக்கில் புலிகளைத் தோற்கடிப்பதன் மூலம் வலுச்சமநிலையை மாற்றலாம் என எதிர்பார்ப்பின் புலிகள் வேறு ஒரு பகுதியில் வெற்றிபெறுவதன் மூலமும் வலுச்சமநிலையை மாற்றலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அது யதார்த்த பூர்வமானது. அவ்வாறு இல்லாதுவிடில் நெப்போலியனதும் ஹிட்லரினதும் தோல்வி ரஷ்யாவில் அதாவது மொஸ்கோ படையடுப்பில் ஏற்பட்ட தொல்விகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்க முடியாது.
-ஜெயராஜ்-
ஈழநாதம் நாளேட்டுக்காக எழுதியது

நன்றி: தமிழ்நாதம்

Wednesday, January 10, 2007

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

கானமயிலாட அதனைப் பார்த்த வான்கோழி தானும் ஆடியதாம்
-அருஸ் (வேல்ஸ்)-

விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நிகழ்த்தவில்லை ஆனாலும் சிங்களப்படைகளின் விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் தொடர்கின்றன. அதற்கான காரணமும் கூறப்படுகின்றது. புலிகள் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டனர், புலிகளின் கனரக ஆயுதங்களை அழிக்கிறோம், புலிகளின் கனரக ஆயுதங்கள் இராணுவ முகாம்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை எனும் காரணங்களை கூறிக்கொண்டு சிங்களப்படைகளின் இனப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இடம்பெற்று வரும் இந்தப் போருக்கும் முன்பு நடைபெற்ற ஈழப் போர்களுக்கும் அதிகளவிலான வேறுபாடுகளை யாரும் காணமுடியாது. ஆனாலும் முக்கிய சில வேறுபாடுகள் உண்டு. ஒன்று முற்று முழுதாக சமாதானம் முறிந்துவிடாத நிலையில் இடம்பெறும் போர். இரண்டாவது தற்போது இடம்பெறும் போர் அதிகளவான சர்வதேசத்தின் கவனத்தை பெற்றிருப்பது.

சர்வதேசத்தின் கவனம் அதிகளவில் குவிந்துள்ள நிலையிலும் சிங்கள தேசம் தனது படுகொலைகளையோ, கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களையோ அல்லது அப்பட்டமான மனித உரிமை மீறல்களையோ சிறிதளவேனும் குறைத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கவலைகளை வெளியிட்டும், போரை நிறுத்துமாறு கூறியும், மனித நேயமுள்ள சில மேற்குலக நாடுகள் சிங்கள அரசின் போக்கில் அதிருப்தி அடைவதாக கூறியும் அரசின் காதில் ஏறவில்லை.

இது எதனைக் காட்டுகின்றது? வாய்மூலமான அழுத்தங்கள் எதற்கும் உதவப்போவதில்லை என்பது ஒருபுறமிருக்க, சிங்கள தேசம் தன்னையும் தனது படைகளையும் ஒரு கற்பனைக் கோட்டில் வைத்து கனவு கண்டுகொண்டு செயற்படுகின்றது என்பது தான் யதார்த்தம்.

அதாவது சிங்கள தேசம் தன்னை ஒரு இஸ்ரேலாகவும் (நீங்கள் சிரிக்கக் கூடாது), தனது படைகளை இஸ்ரேலியப் படைகளுக்கும் ஒப்பிட்டும் போரை நடத்திக்கொண்டு இருக்கிறது. இதனை நான் சொல்லவில்லை. தென்பகுதி ஊடகங்களினதும் பெரும்பாலான இனவாதிகளின் கானல் நீர் சிந்தனைகள் அது தான்.

இஸ்ரேலியப் படைகளை பொறுத்தவரை தமது படைவீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டால் கூட அதன் விமானப்படையின் நவீன கு-16 ரக விமானங்களும், அப்பாச்சி உலங்குவானூர்திகளும் பலஸ்தீனத்தின் ஒரு கிராமத்தையோ அல்லது நகரத்தின் ஒரு பகுதியையோ தரைமட்டமாக்கிவிடுவதுண்டு.

அங்கு இடம்பெற்று வரும் பொதுமக்களின் இழப்புக்களை அவை கவனத்தில் கொள்வதில்லை. ஐ.நாவும் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு எதையும் பெரிதாக செய்யப்போவதில்லை. வேறு நாடுகள் கண்டனத்தீர்மானங்களை கொண்டுவந்தால் அதை அமெரிக்கா தடுத்து விடும். இது தான் அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு உள்ள அனுகூலங்கள். இராணுவ ரீதியான அனுகூலங்களை பொறுத்த வரையில் எதிர்த்தரப்பு மிகவும் பலவீனமானது.

தற்போது தென்பகுதி இனவாத ஊடகம் ஒன்றின் உள்ளக்குமுறலை பார்ப்போம் 'தனது ஒரு படைச்சிப்பாய் கொல்லப்பட்டாலும் இஸ்ரேல் பலஸதீன மக்களின் மீது கடுமையான குண்டுவீச்சுக்களை மேற்கொள்ள தயங்குவதில்லை. அதேபோல நாமும் பின்பற்றுவதன் மூலம் புலிகளை அழிக்க முடியும்". இது தான் பேரினவாத அரசிற்கு இனவாத தென்னிலங்கை ஊடகம் கொடுத்த ஆலோசனை.

இதன் பின்னர் கடந்த ஆண்டு ஏப்பிரலில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல், கடற்படை மீதான தாக்குதல் என்பவற்றிற்கு வஞ்சம் தீர்ப்பதற்கு சிங்கள விமானப்படை தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசியபோது அதனை இஸ்ரேலுக்கு ஒப்பிட்டு இந்த ஊடகங்கள் ஆனந்தக்கூத்தும் ஆடியிருந்தன.

எனினும் இந்த ஊடகங்கள் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கா மீதான தாக்குதலின் பின்னர் சிங்கள விமானப்படை ஏன் தமிழ் மக்களின் மீது குண்டு வீசவில்லை என கேள்வி எழுப்பியதுடன், அரசு சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்து விட்டது எனவும் இராணுவத்தில் இரண்டாம் நிலை அதிகாரியின் மரணத்திற்கு மெளனமாகியது அவமானமானது எனவும் தெரிவித்திருந்தன.

மேலும் சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு கடந்த வருடம் லெபனானை தரைமட்டமாக்கிய இஸ்ரேலை போல சிங்கள தேசம் நடந்து கொள்ளவில்லை எனவும் தமது ஆதங்கத்தை தெரிவித்திருந்தன.

அதனுடன் மட்டும் நின்றுவிடாமல் விடுதலைப் புலிகளில் ஒரு இரண்டாவது அல்லது மூன்றாம் நிலை உயர்மட்டத்தலைவர் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் உங்களை (சிங்கள அரசை) சாம்பலாக்கி இருப்பார்கள் என்றும் தமது அடிமனது மரண பயத்தை வெளிக்காட்டவும் தவறவில்லை. அதாவது தமது படைகளை இஸ்ரேலியப் படைகளுக்கு ஈடாக கற்பனை பண்ணுவதை தான் தென்பகுதி ஊடகங்கள் முழு மூச்சாக தற்போது செய்து கொண்டிருக்கின்றன.

இவற்றை எல்லாம் ஒருபுறம் தவிர்த்தால் இன்று மகிந்தவுடன் சேர்ந்து போரை முன்னின்று நடத்துபவர்களில் முதன்மையான இருவரும் தமது வாழ்நாளில் மிகுதிப்பகுதியை அமெரிக்காவில் கழிக்க இருப்பவர்கள்.

ஓன்று போரினை ஆரம்பித்தவரும் அதற்கு திட்டங்களை வகுப்பவருமான கோத்தபாய ராஜபக்ச. இவர் யாழ். கோட்டை முகாமை சிங்களப்படைகள் இழந்த பின்னர் அமெரிக்காவில் சென்று குடியேறியவர். தற்போது மீண்டும் தலைகாட்டியுள்ளார். ஆட்சி மாறினால் அல்லது அண்ணாவின் ஆட்சி தடம்புரண்டால் அல்லது போரில் தோல்வியுற்றால் மீண்டும் அமெரிக்காவிற்கே சென்றுவிடுவார்.

இரண்டாவது கோத்தபாயவினால் வழிநடத்தப்படும் போரை களத்தில் நகர்த்தும் சிங்கள அரசின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா. இவர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு ஏதுவான கிறீன் கார்ட் வீசா பெற்றவர். அதாவது போரின் வெற்றி தோல்வி இவரை பாதிக்கப்போவதில்லை தனது பதவிக்காலம் முடியும் போது. போரில் ஈட்டிய பணத்தை எடுத்துக்கொண்டு, தனது மனைவி மற்றும் இரு புதல்விகளுடன் அமெரிக்கா சென்றுவிடுவார்.

இதில் கோத்தபாயவை பொறுத்தவரை நீண்டகாலம் அமெரிக்காவில் வாழ்ந்தவர். அந்த நாட்டின் தொலைக்காட்சிகளில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளையும், விமானக்குண்டு வீச்சுக்களையும் அதிகம் கண்டு கழித்திருப்பார். எனவே தமது படைகள் இராணுவ நடவடிக்கைகளில் தோல்விகளை சந்தித்தாலும் விமானக்குண்டு வீச்சுக்களில் அதே பாணியை பின்பற்ற முனைந்து நிற்கின்றார்.

சம்பூர் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த மகிந்த, திருமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பில் சம்பூரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருந்தார். ஆனால்; அன்று இணைத்தலைமை நாடுகள் காட்டிய மெளனம் அவர்களின் அனுமதியாகவே மகிந்தருக்கு எண்ணத்தோன்றியது. இவை தான் சிங்களப்படைகளின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களிற்கான காரணிகளிற் சில.

கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.07) மன்னாரில் உள்ள இலுப்பைக்கடவையில் குண்டுவீசி 17 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த செய்தி தணியும் முன்னர் திருமலையின் வெருகல் பகுதியில் ஜனவரி 03 ஆம் நாளும், முல்லைத்தீவில் ஜனவரி 04 ஆம் நாளும் விமானக்குண்டு வீச்சை நிகழ்த்தியுள்ளது சிங்கள விமானப்படை. சிங்களப்படையின் இந்த திமிர்த்தனமான போக்கிற்கு அதன் கற்பனைகள் தான் காரணம்.

ஆனால் களநிலவரம் அதற்கு எதிர்மறை. சிங்கள அரசு இஸ்ரேலும் இல்லை விடுதலைப் புலிகள் அதற்கு குறைந்தவர்களும் அல்லர். ஏனெனில் சிங்களப் படைகளை போல ஒரு தாக்குதலில் ஆயிரம் படைகளை இஸ்ரேல் இழந்தது கிடையாது. இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்கு சிங்கள தேசம் நிகராகவும் முடியாது. இஸ்ரேலின் இராணுவ வலிமைக்கு எதிராக பெரும்படை கொண்டு மோதி படைவலுச்சமநிலை கண்டதும் அங்கு நடக்கவில்லை. இஸ்ரேலின் மீதுள்ள அமெரிக்காவினதும், மேற்குலகினதும் கரிசனை போல சிங்கள தேசத்திற்கு கிடைக்கப்போவதும் இல்லை.

கற்பனைகளை விட்டு நிஜத்திற்கு சிங்கள தேசம் வருமானால் பல விடயங்கள் தெளிவாகும். படைக்கட்டமைப்பு, போர்க்கள நுட்பம், புலனாய்வு வலையமைப்பு, ஒருங்கிணைந்த நடவடிக்கை என இஸ்ரேலின் படை நுட்பங்களுக்கு இணையனவர்கள் புலிகள் தான் என்பது புரியும். இவற்றை விட புலிகளின் அர்பணிப்புத்தன்மைக்கு உலகில் எவரும் ஈடாக முடியாது என்பதும் உண்மை.

1980 களின் நடுப்பகுதியில் இருந்து சிங்கள அரசிற்கு இஸ்ரேலும், ஏனைய முன்னனி நாடுகளும் ஆயுத வழங்கல், தொழில்நுட்பம், பயிற்சி, புலனாய்வு போன்ற நடவடிக்கைகளில் உதவியே வந்துள்ளன. ஆனால் அவை எல்லாம் புலிகளின் விடுதலைப் போரின் முன் மண் கெளவியது ஏன் என இன்னமும் சிங்கள அரசிற்கு புரியாத புதிராக இருப்பது ஆசசரியமானதே.
அமெரிக்கா என்ற வல்லாதிக்க நாடு நிதி உதவி, ஆயுத உதவி என அள்ளிக்கொடுக்க வளர்ந்தது இஸ்ரேல். ஆனால் எந்த ஒரு நாட்டின் உதவிகளும் இல்லாமல் தமது சொந்த மக்களை மட்டும் நம்பி வளர்ந்தது தான் புலிகளும் விடுதலைப்போரும். தம்மிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டும் கொண்டு சிங்களப்படைகளுக்கு எதிராக விஸ்பரூபம் எடுத்த புலிகளை இஸ்ரேலைவிட உயர்ந்த ஆளுமையும், ஆற்றலும் உள்ளவர்கள் என்று கூறினால் அது தவறாகாது.

இறுதியாக ஒன்றைக் கூறி முடித்துக் கொள்கிறேன், நான் வட அயர்லாந்தில் வாழ்ந்த காலத்தில் அங்கு வாழும் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தமது போராட்டங்கள், அதன் பரிணாமங்களை பற்றி சொல்வார்கள். நானும் எமது இனத்தின் விடுதலைப்பேரை பற்றி சொல்வேன்.

ஒரு தடவை வட அயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Queen's Univerity of Belfast) விரிவுரையாளர் ஒருவருடன் உரையாடும் போது எமது தேசியத்தலைவர் தொடர்பான சில தகவல்களை கூறினேன். ஆசசரியம் அடைந்த அவர் உங்களது தலைவர் இங்கு எப்போதாவது வந்துள்ளாரா என கேட்டார். இல்லை, ஏன் என நான் வினவினேன். அதற்கு அவர் உங்கள் தலைவரை பார்க்க ஆசைப்படுகிறேன் எனக்கூறியதுடன். தங்களுக்கு இப்படி ஒரு தலைவர் கிடைக்கவில்லை என ஏக்கமாக கூறினார்.

உண்மை தான். மிகவும் பழமை வாய்ந்த விடுதலைப் போர்களில் வட அயர்லாந்து போரும் ஒன்று. அவர்களின் போராட்டத்திற்கு ஓரு காலகட்டத்தில் அமெரிக்கா கூட தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. ஆனாலும் அவர்களால் முழுமையான வெற்றியை பெறமுடியாது போனதற்கு முக்கிய காரணியாக தமக்கு கிடைத்த ஆளுமையற்ற தலமைத்துவத்தை தான் அந்த மக்கள் கருதுகிறார்கள். அதாவது தமது போராட்டம் இக்கட்டான கட்டங்களை அடைந்த போது அதை எதிர்கொள்ளும் ஆற்றல் தமது தலைமையிடம் இருக்கவில்லை என்பது அவர்களின் கருத்து.

ஆனால் எமக்கு கிடைத்த ஒப்பற்ற தலைமைத்துவம் தான் எமது விடுதலைப்போ¡¢ன் விரைவான நகர்வுக்கு காரணம். உலக விடுதலைப் போர்களுடன் ஒப்பிடும் போது எமது விடுதலைப் பயணத்தின் வேகம் அதிகம் (வல்லாதிக்க நாடுகளின் தலையீட்டால் விடுதலை அடைந்த நாடுகளை இங்கு கருதவில்லை). இதற்கு விடுதலைப்போர் சந்தித்த ஓவ்வொரு இக்கட்டான சூழ்நிலைகளையும் எமது தலைமைத்துவம் மிகச் சாதுர்யமாக நகர்த்திய விவேகம் தான் முக்கியமானது.

தற்போது தோன்றியுள்ள போரும் சமாதானமும் என்ற நெருக்கடியான நிலமையும், அதை தனக்கு சாதகமாக்கும் சிங்கள அரசின் தந்திரமும் விரைவில் மாற்றி அமைக்கப்படும். தன்னை கான மயில் என நினைத்து துள்ளியாடும் வான்கோழிக்கும் விரைவில் தனது நிலை புரியும்.

நன்றி: தமிழ்நாதம்

Friday, January 05, 2007

மாமனிதர் குமார் பொன்னம்பலம் - நினைவு தினம் இன்று

அல்லற்படும் தமிழினத்தின் அவலங்களைப் போக்க ஆணித்தரமாகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் இன்று 7 ஆவது நினைவுதினம்

-அப்பாத்துரை விநாயகமூர்த்தி-

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 07 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும். இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரங்களால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அவர் கொலை செய்யப்படும் பொழுது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர் சட்ட வல்லுநர் மறைந்த ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார்.

அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியற் கோட்பாடுகளை ஏற்று இலங்கை வாழ் தமிழர்களது பிரச்சினைகளைத் திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு எல்லா வழிகளிலும் செயற்பட்டார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நாமத்தை உச்சரிக்கவே யாரும் அஞ்சித் தயங்கிநின்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதால் மட்டுமே தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்ற யதார்த்தத்தை பகிரங்கமாக வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களையே சாரும். மேலும் தமிழர்களின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதையும் இலங்கையிலும் சர்வதேசத்திலும் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் அமரர் குமார் அவர்களே.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்களையும் சர்வதேசத்திற்கு வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களையே சாரும். இதற்காக இலங்கை வாழ் தமிழர்கள் அவருக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அவரது இந்தக் கொள்கைகளால் அவரைக் கைது செய்யும் நோக்குடன் சந்திரிகா அம்மையாரின் அரசு இரகசியப் பொலிஸாரை அவரது வீட்டுக்கு அனுப்பி பல மணி நேரமாக விசாரணை செய்து அவரது வாக்கு மூலத்தைப் பெற்றது. செம்மணி புகழ் அம்மணி சந்திரிகா அம்மையார் தென்னாபிரிக்காவில் வைத்து "தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்" எனப் பேட்டியளித்த சம்பவத்தைக் கண்டித்த ஒரே தமிழ்த் தலைவர் குமாரே ஆவார். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்திரிகா அம்மையார் தொலைக் காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகளை கடுமையாகத் தாக்கிப் பேசி "புலிகளுக்கு ஆதரவாக இயங்குபவர்கள் கொழும்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்ற கருத்தில் பேசியிருந்தார். மறுநாட்காலை குமார் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு இனியும் தான் நீண்ட காலம் வாழ்வது கடினமென என்னிடம் கூறியிருந்தார். அவரின் கொலைக்கு சந்திரிகா அரசே பொறுப்பேற்க வேண்டும்.

குமார் பொன்னம்பலம் அவர்களது கொலைச் சம்பவத்தை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியான பந்துல விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையையும் கொலையோடு சம்பந்தப்பட்டவர்களின் விபரத்தையும் 2000 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமே ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்திருந்தும் அவர் எதுவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை,. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பல தடவைகள் நான் எனது கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தேன். தகுந்த தலைமையின்றி தமிழினம் அநாதையாக்கப்பட்டு படுமோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அவ்விடத்தை நிரப்பக் கூடிய தலைமகன் குமார் பொன்னம்பலமாகவே இருந்தார். அதனையும் கருத்தில் கொண்டு தான் அவர் கொலை செய்யப்பட்ட போது தமிழீழத்தின் அதியுயர் விருதான "மாமனிதர்" என்ற பட்டத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கிக் கௌரவித்தார்.

புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிய தொண்டுகளால் அவர்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இலங்கை அரசியல் சரித்திரம் எழுதும் போது ஜனநாயகக் கட்சிக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் (Democratic People's Alliance Manifesto) உருவாவதற்கு இவர் ஆற்றிய சேவை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இந்த விஞ்ஞாபனத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தினேஸ் குணவர்தனாவின் மக்கள் ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ், பல்கலைக்கழக மாணவர் முன்னணி முதலிய பல கட்சிகளும் சேர்ந்து உருவாக்கின. அதில் அனைத்து கட்சியினரும் கையெழுத்திட்டனர். இதை சிறிமாவோ அம்மையார் கைவிட்டிருக்காவிட்டால் தமிழர்களது பிரச்சினை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும்.

1985 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார். தமிழ் இளைஞர்களுக்கு அவர் ஆற்றிய சேவை இதுவரையாரும் ஆற்றியதில்லை. அவர் இறந்த போது களுத்துறைச் சிறைச் சாலையில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டமை இதை நிரூபிக்கிறது. அவர் மறைவதற்கு சற்று முன் தேர்தலை எதிர் நோக்கி தமிழ்ப் பகுதிகளில் போட்டியிடுவதற்கு ஒரு பட்டியலைத் தயாரித்திருந்தார். இதுவும் அவரது கொலைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். அவரைப் போல் இன்னொருவர் பிறக்கப் போவதில்லை.

மாமனிதர் அவர்கள் தன்னைப் பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறினார். "நீ உனது உயிரைப் பற்றிப் பயப்பட்டால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும், நீ வாயை மூடிக் கொண்டே வாழ வேண்டுமானால் அந்த வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? நான் ஒரு அடிமையாக வாழ்ந்து இனத் துவேசிகளும் ஆட்சியில் உள்ளவர்களும் கூறுவனவற்றிற்கு தலையாட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அவர்கள் விரும்புவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாவிடில் அவர்கள் கூறுவது எனது நம்பிக்கைக்கு எதிராக அமைந்தால் நான் ஏன் எனது மனச் சாட்சிக்கு எதிராக மௌனம் சாதிக்க வேண்டும்"

அவர், தான் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார் என்பதற்கு சுவர்ணவாகினியில் பின்வருமாறு கூறினார். "தமிழர் அரசியல் நிலை என்ன என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஆராய்ந்து பார்த்தேன். ஒரு புறம் பயங்கரமான சிங்கள அரசும் மறு புறம் ஒரு சதமும் பெறுமதியற்ற தமிழ்க் குழுக்களும் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்கள் சிங்கள அரசுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வந்தனர். எக் காரணத்தை முன்னிட்டு அவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்டு அறியுங்கள். அரசு அவர்களுக்கு பாதுகாப்பும் தனிப்பட்ட உதவிகளும் செய்கிறது. இத்தகைய சூழலில் தமிழ் மக்களின் அபிலாசையை முன்னெடுத்துச் செல்லும், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் ஒரு புறம் போராடிக் கொண்டு மறு புறம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலேயே நான் புலிகளை ஆதரிக்கிறேன்" என்றார்.
அல்லற்பட்ட தமிழினத்தின் அவலங்களைப் போக்கி அவர்களுக்காக ஆணித்தரமாகக் குரல் கொடுத்த ஆண்மகனின் குரல்வளை நசுக்கப்பட்டது. தமிழர்கள் ஒரு தலைவனை இழந்தனர். தமிழர்களுக்காக தன்னையே தியாகம் பண்ணி இந்தத் தரணியிலே அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் செய்த தொண்டுகளெல்லாம் தமிழர் தம் சரித்திரத்தில் நிலைத்திருக்கும். மறைந்தும் மறையாத அமரரின் புகழ் நீடு வாழி. அவரது 07 ஆவது சிரார்த்த தினமாகிய இன்றைய நாளில் அவனியிலே தமிழர்களுக்கு இனிமேலாவது ஓர் ஆறுதல் கிட்ட வேண்டும், அதற்கு அமரர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மா ஆசி வழங்கட்டும்.

நன்றி: தினக்குரல் 05/01/2007